2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் மலிக்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 03 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கான சரியான தருணம் இதுவே எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரரும் முன்னாள் தலைவருமான ஷொய்ப் மலிக், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் கவனஞ்செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று, திடீரென டெஸ்ட் ஓய்வை அறிவித்திருந்த அவர், அதுகுறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட்டே தனது அதீத விருப்பாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும், முதற்தரப் போட்டிகளில் விளையாடக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

தனது குடும்பத்துக்காகவும், இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகவும் டெஸ்ட் போட்டிகளுக்காக ஓய்வுபெற விரும்புவதாகத் தெரிவித்த அவர், பல உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியிருக்காத நிலையில், அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குபெற விரும்புவதாகவும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதன் மூலம், தனது சக்தியைச் சேமிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

35 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய அவர், 3 சதங்கள், 8 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 35.76 என்ற சராசரியில் 1,860 ஓட்டங்களைப் பெற்றதோடு, 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஓர் இனிங்ஸில் அவர்பெற்ற அதிகூடிய ஓட்டங்களான 245ஐ, இங்கிலாந்துக்கெதிரான இத்தொடரின் முதற்போட்டியிலேயே அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .