2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கு எதிராக மலிங்க இல்லை

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 10 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆகியவற்றில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிப்பட்டுவரும் மலிங்க, கடந்தாண்டு பெப்ரவரிக்குப் பின்னர், உத்தியோகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடியிருக்கவில்லை. இறுதியாக 2015ஆம் ஆண்டு நவம்பரிலேயே, ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடினார். அவரது முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக, கடந்தாண்டின் உலக இருபதுக்கு-20 தொடர், இந்தியன் பிறீமியர் லீக் தொடர் ஆகியவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார்.

எனினும், மீண்டும் போட்டிகளில் பங்குபெறும் நோக்கத்துடன், கடந்தாண்டு செப்டெம்பர் முதலேயே, பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு அவர் ஆரம்பித்தார். இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில், அவர் பங்குபற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், கிறிஸ்மஸ் காலத்துக்கு அண்மையாக, மலிங்கவுக்கு ஏற்பட்ட டெங்கு காரணமாக, அவரது உபாதைகளிலிருந்து அவர் மீள்வது, தாமதமாகியுள்ளது. எனவே, தென்னாபிரிக்கத் தொடரில் அவர் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் பங்குபற்றுவதே, அவரது தற்போதைய இலக்காகக் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .