2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிரேஸிலைச் சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்

Shanmugan Murugavel   / 2016 மே 03 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் பிரேஸிலில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் தீபம், பிரேஸிலைச் சென்றடைந்துள்ளது. இந்தத் தீபத்தை, பிரேஸிலின் ஜனாதிபதி டில்மா றூசெப், உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.

தொன்மையான கிரேக்க ஆலயமொன்றிலிருந்து சுவிற்ஸலாந்துக்குச் சென்ற தீபம், பிரேஸிலியா நகரைச் சென்றடைந்தமையைத் தொடர்ந்து, ஒலிம்பிக்குக்கான மூன்று மாத காலம் ஆரம்பிக்கவுள்ளது.

ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் கொண்டுசெல்லப்பட்ட தீபம், குதிரையில் பின்னர் வைக்கப்பட்டு, பிரேஸிலின் பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து, பிரேஸிலின் தலைநகரான பிரேஸிலியாவிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, டில்மா றூசெப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறான நெருக்கடிகளைச் சந்தித்துள்ள பிரேஸிலுக்கு, அவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவதற்கான சந்தர்ப்பமாக ஒலிம்பிக் போட்டிகள் அமையுமென்ற போதிலும், ஒலிம்பிக் தீபம் குறித்து, உள்நாட்டவர்கள் பெருமளவில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகவும் விசாரணையை எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதி றூசெப், பதவி விலக வேண்டுமெனக் கோரும் கோரிக்கைகள் அதிகரித்திருந்தன. அந்நாட்டின் செனட்டினால், அவருக்கெதிரான அரசியல் விசாரணைகளுக்கான வாக்கெடுப்பு வெற்றிகொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், ஜனாதிபதி றூசெப் கலந்துகொண்ட இறுதி மக்கள் சந்திப்பாகக் கூட இது அமையலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .