2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பங்களாதேஷைத் தோற்கடித்துச் சம்பியனானது அயர்லாந்து

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தகுதிகாண் போட்டித் தொடரின் சம்பியன்களாக, அயர்லாந்து பெண்கள் அணி தெரிவாகியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி சம்பியன் பட்டம் வென்றது.

பாங்கொக்கில் இடம்பெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிகர் சுல்தானாவின் 41 (57), றுமானா அஹ்மட்டின் ஆட்டமிழக்காத 38 (43) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில், சியாரா மெட்கால்பே, 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய அயர்லாந்து அணிக்கு, இறுசூதிப் பந்தில் ஓர் ஓட்டம் தேவைப்பட, அதைப் பெற்றுக் கொண்ட அயர்லாந்து அணி, சம்பியன் பட்டம் வென்றது. துடுப்பாட்டத்தில், செசிலியா ஜொய்ஸ் 32 (30), லாரா டெலானி ஆட்டமிழக்காமல் 26 (36) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், றுமானா அஹ்மட், நஹிடா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகியாகவும் தொடரின் நாயகியாகவும், பங்களாதேஷ் அணியின் றுமானா அஹ்மட் தெரிவானார்.

இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவான இரு அணிகளும், உலக இருபதுக்கு-20 தொடருக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .