2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மீண்டும் வெள்ளையடித்தது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 08 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

பே ஓவல் மைதானத்தில் இன்று இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. 6.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிவந்த நியூசிலாந்து அணிக்காக, 4ஆவது விக்கெட்டுக்காக இணைந்த கேன் வில்லியம்ஸ், கொரி அன்டர்சன் இருவரும், 12 ஓர்களில் 124 ஓட்டங்களைக் குவித்தனர். பின்னர், இறுதி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்திய அன்டர்சன், 200க்கு அண்மையான ஓட்டங்களைப் பெறுவதை உறுதிப்படுத்தினார்.

துடுப்பாட்டத்தில் அன்டர்சன், 41 பந்துகளில் 2 நான்கு ஓட்டங்கள், 10 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களைக் குவித்தார். கேன் வில்லியம்ஸன், 57 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் றுபெல் ஹொஸைன், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

195 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 82 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட அவ்வணி, இறுதி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தமையால், ஓட்டங்களைப் பெறத் தவறியிருந்தது. துடுப்பாட்டத்தில் சௌமியா சர்கார் 42 (28), ஷகிப் அல் ஹஸன் 41 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷ் சோதி, ட்ரென்ட் போல்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, அன்டர்சன் தெரிவானார்.

ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை, நியூசிலாந்து அணி வெள்ளையடித்திருந்த நிலையில், தற்போது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரையும் வெள்ளையடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .