2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

"சபையமர்விற்கு கறுப்பு பட்டியணிந்து செல்வேன்"

Kanagaraj   / 2013 மார்ச் 03 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாநகர சபையின் மாதாந்த அமர்விற்கு கறுப்பு பட்டியணிந்து சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்

பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தான் எதிர்வரும் 7 ஆம் திகதி கறுப்பு பட்டியணிந்து செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த சில மாதங்களாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீதும் புனித இஸ்லாத்தின் மீதும் பாரியளவிலான வன்முறைகளும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையின் நாலாபுறங்களிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருவதுடன், தங்களது மார்க்க அனுஷ்டானங்களைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சிநிரலின் கீழ், பௌத்த இனவாதிகளின் செயற்பாடு சுதந்திரமாக அரசாங்கப் பாதுகாப்புடன் நடந்தேறுகின்றது முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ வன்முறைகள் நடந்தேறியிருக்கின்றன.

அது விடயமாக இன்றுவரைக்கும் ஒருவரேனும் கைதுசெய்யப்பட்டதாகவோ அல்லது அதற்காக நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டதாகவோ கிடையாது. இந்த நாட்டில் காவி உடையுடன்  மேற்கொள்ளப்படும் எந்தவிதமான அநீதிகளுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் சட்ட நடவடிக்கை கிடையாது என்பதை கடந்தகால நிகழ்கால சம்பவங்கள் சான்றாகும் என்றார்.

நீண்டகாலம் பழமை வாய்ந்த அநுராதபுர சியாரமும் தம்புள்ளை பள்ளிவாசலும் பட்டப்பகலில் பல பேர் மத்தியில் உடைக்கப்பட்டது.

அதன் சூத்திரதாரிகளை அன்று கைதுசெய்யாது அரசாங்க பாதுகாப்புப் படைகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததன் விளைவே  இன்று நாளுக்குநாள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையையும் போராட்டத்தினையும் தோற்றுவித்துள்ளது.

இதனை அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பும் மனச்சாட்சியுடன ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

சியாரம் உடைப்பில் ஆரம்பித்து இன்று மாடு அறுக்கும் மடுவம்வரைக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதிகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. நாளை எதுவரைக்கும் என்பது எவருக்கும் தெரியாத கேள்விக்குறியோடு இருக்கின்றது.

முஸ்லிம்கள் தினம் தினம் துன்புறுத்தப்படுகின்றார்கள். பௌத்த இனவாதத்தின் உச்சக்கட்ட முஸ்லிம்கள் கொடுமைக்கும் அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதனை தடுத்து நிறுத்தி முஸ்லிம்கள் அச்சமின்றி தங்களது அன்றாடக் கடமைகளையும் மார்க்க அனுஷ்டானங்களையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க பாதுகாப்புத் தரப்பினர் தவறிவிட்டனர்.

பாதுகாப்பு தரப்பு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க ஆர்வம் காட்டாதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும.; ஒன்று பாதுகாப்புத்தரப்பில் பெரும்பான்மை சமூகத்தவர்களா பௌத்தர்கள் இருப்பதால் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தரப்பின் கண்டிப்பான உத்தரவாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

எது எப்படியிருப்பினும் ஒரு தனிமனிதனுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது சட்ட நடவடிக்கை எடுக்கும் பாதுகாப்புத்தரப்பு ஒரு சமூகத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது ஒரு பாரபட்சமான நடவடிக்கையாகும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.  

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது மத அனுஷ்டானங்களையும் அன்றாடத் தேவைகளையும் சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பினருக்கு உரியதாகும்.

ஆனால் இன்று ஒரு இனத்திற்கு எதிராக பேரினவாதிகளால் இழைக்கப்படும் அநீதிகளையும் அடக்குமுறைகளையும் வேடிக்கை பார்க்கின்ற நிலையில் பாதுகாப்பு தரப்பு இருப்பது வேதனைக்குரியது.

கட்டுக்கடங்காமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தும் இனவாதிகளை பொதுச் சமாதானத்திற்கு பங்கம் விளைவித்தல் என்ற பொலிஸ் சட்டத்திற்கு அமைவாக கைதுசெய்து நீதிமன்றத்திற்கு முன் ஏன் நிறுத்த முடியாது?

அத்தோடு பள்ளிவாசல்களை உடைப்பதை நேரிலும் வீடியோ காட்சிகளினுடாகவும் பார்த்தபோதிலும்,  பொலிஸார் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை.

எந்தப் பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை என்றும் அவ்வாறு உடைக்கப்பட்டதற்கு இன்றுவரைக்கும் பொலிஸில் ஒரு முறைப்பாடுகளும் கிடையாது என அரசாங்கம் கூறுவது முழு பூசனிக்கயை சோற்றில் மறைக்கின்ற விடயமாகும்

இவ்வாறு அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அநீதிகளையும் அடக்குமுறைகளையும் தடுக்க தவறி விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்புகளை தெரிவிக்கவிருக்கின்றேன் என்றார்.

  Comments - 0

  • aj Sunday, 03 March 2013 06:09 AM

    வாக்கு வேட்டைக்கு, பிரியாணி அரசுளுக்கு இந்த கறுப்புப்பட்டி தேவை. இவர் தான் ஹலாலா அற்ற உணவை புறகணிக்க சொன்ன மேதாவி. அப்போ மற்ற மக்களும் தாங்கள் விருப்பதை தெரிவு செய்யவேண்டும். அப்படி வெளிகிட்ட வண்டிய கட்டவேண்டியது தான். இப்போது அடுத்த பிரச்சனையை துண்டி, மக்களை சூடாக்கி அரசியல் செய்கிறார் இந்த கருப்பு பட்டி. முடிந்த களுத்தி சிகப்பு துண்டு மாதிரி போட்டுகொண்டு அதே போல நெற்றி பகுதிலும் ஒரு துண்டை கட்டிக்கொண்டு போனால் நல்ல இருக்கும்.

    Reply : 0       0

    manikhossain Sunday, 03 March 2013 06:39 AM

    முஸ்லிம்,தமிழ் மக்கள் ஒன்றாசேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க அரிய சந்தர்ப்பம்.

    Reply : 0       0

    vallarasu Sunday, 03 March 2013 07:07 AM

    சார் நீங்க மட்டும்தான் அடிக்கடி எமது முஸ்லிம்களை பற்றி குரல் கொடுக்கிறீர்கள்... நன்றி சார்.

    Reply : 0       0

    MADURANKULIKURANKAAR Sunday, 03 March 2013 06:11 PM

    சார் விட்டுல தனியாகவா தூங்குறிக....கவனம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .