2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

13ஆவது திருத்தத்தை அகற்ற முற்பட்டால் தமிழர்கள் கிளர்ந்தெழுவர்: இரா.துரைரெட்ணம்

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

"தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை நிரந்தரமாக இணைப்பதற்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாத அரசாங்கம், செயலாளர், அமைச்சரின் ஆலோசனையை கேட்டு 13ஆவது திருத்தச்சட்டத்தை அகற்றுவதற்கு முற்பட்டால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவது திண்ணமாகும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்து இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின் சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்குவதில் ஒரு ஆரம்ப படியாக ஏற்படுத்தப்பட்தே 13ஆவது திருத்தச்சட்டமாகும் அதனை அரசியலமைப்பிலிருந்து இல்லாதொழிக்க சிறுபான்மையினராகிய எம்மால் அனுமதிக்க முடியாது.

எமது நாட்டில் இனவாத ஆட்சியாளர்களால் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அனைத்தும் கிழித்தெறியப்பட்டதே வரலாறாகும். இது அனைவராலும் அறியப்பட்ட விடயம். இதற்குக் காரணம் இலங்கைக்குள் சிங்கள தேசிய ஆட்சியாளர்களால் சர்வதேசத்தின் எந்தவித அனுசரணை, பார்வை, மேர்ப்பார்வை கண்காணிப்பு எதுவும் இல்லாது ஏற்படுத்தப்பட்டமையை ஆகும்.

இது மட்டுமன்றி தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயத்தில் அல்லது பிரச்சினையில் எந்தவிதமான தீர்வையும் வழங்கக் கூடாது என்பதுமே காரணமாகும். இந்த நேரத்தில், இலங்கையின் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் சர்வதேசத்தின் பார்வை விழிப்படைந்துள்ள நிலையில், இலங்கை அரசின் குற்றங்களைக் கண்டுபிடித்து  விசாரிப்பதற்கான சூழல் பலமடைந்திருக்கின்ற நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மை இனங்களுக்கு துரோகத்தை விளைவித்தும், சர்வதேசத்தின் பார்வையில் மண்ணைத்தூவியும், ஏமாற்றியும்,ஒருபக்கச் சார்பாக ஆட்சி முறையை குடும்பஆட்சி முறையாக ஒரு வழிமுறைமைக்கு ஒப்பானதாக வழிநடத்தி வருகிறது. இது ஒரு ஜனநாயக ஆட்சிமுறைக்கு விரோதமானது.

எம்மைப் பொறுத்தவரையில், பல ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டு விரக்தியின் விளிம்பில், தமிழ் மக்க்ள இருக்கின்ற ஒரு சர்வதேசத்தின் பார்வையுடன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை இல்லாதெழிக்கப்பட்டால் கொஞ்சமாவது செயற்படுகின்ற மாகாண சபை முறைமை ஒழிக்கப்பட்டுவிடும்.

இதனால் வட கிழக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக சிறுபான்மை மக்கள் அடையும் நன்மை இல்லாதெழிக்கப்பட்டால் அனைத்து விடயங்களுக்கும் கையேந்த வேண்டிய நிலைமையே ஏற்படும்.
குறிப்பாக, உள்ளுராட்சிச் சபை முறைமை, நியதிச்சட்டம் உருவாக்குதல், எமக்கான முகாமைத்துவக் கட்டமைப்பு, அதிகாரத்தைக் கோருகின்ற நிருவாக முறைமை போன்ற மத்திய அரசாங்கத்துக்குக் கட்டுப்படாத பல விடயங்கள் இல்லாது போகும்.

13ஆவது திருத்தச்சட்டச்சட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் இழந்த இழப்பு என்பது சொல்லில் மாழாதவைகள் என்பததும் இதில் ஒவ்வொரு தமிழருக்கும் பங்குண்டு, இந்த வலியுடனேயே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இந்த இடத்தில் யாரும் மறந்து விடக் கூடாது.

தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை நிரந்தரமாக இணைப்பதற்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாத அரசு, செயலாளர், அமைச்சர் சொல்லி 13ஆவது திருத்தச்சட்டத்தை அகற்றுவதற்கு முற்பட்டால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவது திண்ணமாகும்.

ஆகவே இந்த 13ஆவது திருத்தச்சட்டம் இல்லாதெழிக்கப்படுதல் என்பதற்கே இடமில்லை. தமிழ் மக்களுக்கான உரிமை சார்பிரச்சினைகளுக்கான தீர்வின் ஆரம்ப வடிவமாக ஏற்றுக்கொள்கின்ற, அதனைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தத்தின் நெருக்கடியில் இருந்து கொண்டு, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய முழு அதிகாரத்தினையும் கேட்கின்ற நிலைமையில், இதற்காக சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை துணிந்து அளுத்தங்களை பிரயோகிக்கின்ற சூழ்நிலையில் இச் சட்டத்தினை அகற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சி சிறுபான்மையினருக்கு துரோகத்தையே செய்வதாக அமையும்.

எனவே இந்த 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றும் நடவடிக்கைகள் அனைத்தினையும், இலங்கை அரசாங்கத்தின் ஒருபக்கச் சார்பான ஆட்சியாளர்கள் மேற்கொள்வதனை தடுத்து நிறுத்த தமிழ் மக்களும், சர்வதேசமும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என அறைகூவல் விடுகிக்கிறேன். அத்தோடு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட வேண்டிய முழுத்தீர்வையும் வழங்குவதற்கும் முன்னின்று உழைக்க வேண்டும்" என்றார்.

  Comments - 0

  • Mohammed Hiraz Monday, 22 October 2012 07:29 AM

    வட கிழக்கை பிரிக்கையிலும் பொங்கி எழுவோம் என்றார்கள், ஆனால் கடல்தான் பொங்கியது ஆக்கள் சொன்னபடி பொங்கி எழவில்லை....

    Reply : 0       0

    majeethu Monday, 22 October 2012 08:40 AM

    ஹகிம் நானா என்ன செய்ய போகிறார்...???

    Reply : 0       0

    aj Monday, 22 October 2012 09:56 AM

    பொங்கி எழுதுவது, போராடுவது பற்றி நீங்கள் பேச கூடாது. அப்படி பேசினால் உங்கள் சமூகத்துக்கு அது வெட்கம். தமிழர்களின் போராட்டம் பற்றி உலகம் அறியும். இலங்கை அரசு அறியும். ,மற்றவர்களை போல போராடுவது ஒரு இனம் தீர்வு கேட்பது வேறு இனம் என்று இருப்பது இல்லை. எதுமே செய்யாமல் அங்கயும் இங்கயும் நிண்டுகொண்டு மாற்றி மாற்றி பேச உங்களால் மட்டுமே முடியும்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Monday, 22 October 2012 11:28 AM

    அவர் அவர்கள்தான் அவர் அவர்களுக்கு போராட வேண்டும். நீங்கள் முஸ்லிம்களுக்கும் சேர்த்து போராடியதாக கூறிகொண்டு முஸ்லிம்களின் வளங்களையும் நிர்வாகத்தையும் சேர்த்து கோருவதுதான் பிரச்சினை. இல்லையெனில் உங்கள் கோரிக்கையில் அவர்கள் தலையிடும் நிலை இருக்காது. போராடி கண்டபலன் என்ன??? இனியாவது உங்களுக்காக போராடுங்கள். அடுத்தவர்களும் உங்களைபோன்ற உணவுகளைதான் உண்ண வேண்டும் என எண்ணம் வைக்காதீர்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .