2026 மே 04, திங்கட்கிழமை

நான் முதலமைச்சராவதென்பது அரசின் கட்டுக்கதையே: நீதியமைச்சர் ஹக்கீம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக அரசாங்கமே வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விட்டுள்ளது. இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டதொன்றல்ல.

ஒரு குழறுபடியினை உருவாக்குவதே இந்தக் கதையில் உள்நோக்கமாகும். இதற்கு நிறையப் பேர் இப்பொழுதே இரையாகி விட்டார்கள்' என்று மு.காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'எமது கட்சிக்குள் இருக்கின்ற மேல் மட்டத்தவர்களே கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் பாங்கில் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் குறித்து சில முன் அறிவித்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. கட்சியில் தீர்மானிக்கப்படாததொரு விடயம் குறித்து, பகிரங்கமாக அறிவித்தல் விடுவதானது பிழையானதொரு விடயமாகும்' என்று அவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மு.காங்கிரசின் காத்தான்குடி முக்கியஸ்தர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பூநொச்சிமுனை இக்ரஹ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே – மு.கா. தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் ரஊப் ஹக்கீம் களமிறக்கப்படலாம் என அண்மையில் சில செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளரும் கல்முனை மாநகரசபை உதவி மேயருமான நிஸாம் காரியப்பர் - கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரே வர வேண்டுமென சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மு.காங்கிரஸின் காத்தான்குடி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,

'அடுத்து வருகிற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம் சம்பந்தமாக எல்லோர் மத்தியிலும் பல கேள்விகள் எழுந்துள்ளன. பலவிதமான அபிப்பிராயங்கள் உலவுகின்றன. சில அரசியல் பிரமுகர்கள் தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் எனும் பாங்கில் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர் ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று கட்சித் தொண்டர்கள் கேட்கின்றார்கள்.

மு.காங்கிரஸுக்குள் இருப்பவர்களெல்லாம் தாம் விரும்பியவாறு அறிக்கை விடுவதென்பது கட்சியின் கட்டுப்பாட்டினை மீறுகின்றதொரு செயலாகும். தேர்தல் பற்றிய ஒரு கதை வந்துவிட்டால் எங்கள் கட்சிக்குள் இருக்கின்ற அரசியல் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதோடு, தங்களுக்கேற்றவாறு கட்சியின் தீர்மானங்கள் அமைய வேண்டும் எனும் பாங்கில் பேசுவது வழமையாகும்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலோடு என்னைச் சம்பந்தப்படுத்தி அண்மைக் காலமாக ஒருசில கதைகள் பேசப்படுகின்றன. ஆனால், இது விடயத்தில் நான் எதுவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

ஒரு தேர்தல் வருகின்ற போது, மு.காங்கிரஸுக்கு எப்பொழுதும் சேதம் வருவது வழமையாகப் போய்விட்டது. எவ்வளவு தூரம் இந்தச் சேதத்தினை மிகக் குறைந்ததாக மாற்றி ஒரு தீர்மானத்தை எடுப்பது என்பதே எமக்குள்ள சவாலாகும். ஆனால், சேதங்கள் இல்லாத தேர்தலை மு.கா. சந்தித்ததேயில்லை. 

என்னுடைய பூர்வீக அரசியல் தளத்துக்கு வெளியே சென்று தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் ஒரு போதும் விரும்பியதில்லை. கட்சியைக் காப்பாற்றுவதற்கு வேறு வழிகள் இல்லை எனும் சந்தர்ப்பங்களின் போதுதான் நான் அவ்வாறு வேறு பிரதேசங்களில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இவ்வாறு எனது அரசியல் தளத்துக்கு வெளியே நான் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பங்களில் - அவ்வாறு ஒரு முடிவினை எடுக்கப் போகிறேன் என்பதை முன்கூட்டி என்னைத் தவிர வேறு எவரும் அறிந்திருக்கவேயில்லை.

ஆனால், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக இப்பொழுதே கதைகள் அடிபட ஆரம்பித்துள்ளன. எனவே இதுபற்றி நீங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக அரசாங்கமே வேண்டுமென ஒரு கதையை உருவாக்கி விட்டுள்ளது. இதை நான் சந்தேகத்துடனேயே பார்க்கிறேன். இந்தக் கதையானது கட்சி நலனையோ என்னுடைய நலனையோ பிரதானப் படுத்தி உருவாக்கப்பட்டதொன்றல்ல! ஒரு குழறுபடியினை உருவாக்குவதே இந்தக் கதையில் உள்நோக்கமாகும். இதற்கு நிறையப் பேர் இப்பொழுதே இரையாகி விட்டார்கள்.

எவ்வாறிருந்தபோதும், கிழக்கு மாகாணத்தில் நான் போட்டியிடுவதென்கிற ஒரு முடிவு எடுக்கப்படமாட்டாது என்றும் நான் சொல்ல மாட்டேன்! கிழக்கு மாகாணத்தில் நான் போட்டியிடுவது என்கிற தீர்மானத்தினை எவ்வளவு தூரம் ஓர் ஆயுதமாகப் பாவிக்க முடியுமோ அந்தளவு பாவிப்பேன்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் என்னைச் சம்பந்தப்படுத்தி வெளியாகியுள்ள கதைகள் தொடர்பில் அரச மேல் மட்டத்தினைச் சேர்ந்த எவரும் இதுவரை என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் கதைக்கவில்லை.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை அரசாங்கம் முன்கூட்டி நடத்துவதென்பது என்னுடைய பார்வையில் பிழையானதொரு விஷயமாகும். மத்திய அரசாங்கத்தினைத் தக்க வைத்துக்கொள்வதற்கான ஓர் உபாயமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வடக்குத் தேர்லில் ஏற்படப்போகும் தோல்வியினைச் சரிசெய்வதற்காகவே இவர்கள் கிழக்குத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு யோசிக்கின்றனர். ஆனால், அதிகாரப் பரவலாக்கத்தினை திறந்த மனதுடன் அங்கீகரிப்பவர்கள் எவரும் - முன்கூட்டியே கிழக்குத் தேர்தல் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கிழக்கு மகாணத்தில் மு.காங்கிரஸுக்கு பேரம்பேசும் சக்தி மிக அதிகமாக உள்ளது என்கிற விடயம் அரசாங்கத்துக்கும் தெரியும். எனவே, அந்தப் பேரம் பேசும் சக்தியினை முன்கூட்டியே குலைத்து விடுவதற்காகவே கிழக்கு மாகாணத் தேர்தலில் என்னைச் சம்பந்தப்படுத்தி கதைகள் கட்டிவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கத்திடம் பிச்சை வாங்குகின்றதொரு கட்சியாக முஸ்லிம் காங்கிரசை மாற்றுவதே இவர்களின் நோக்கமாகும்.

எமது கட்சிக்குள் இருக்கின்ற மேல் மட்டத்தவர்களே தங்களுடைய தனிப்பட்ட அரசியல் பிழைப்புக்காக முன் அறிவித்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. கட்சியில் தீர்மானிக்கப்படாததொரு விடயம் குறித்து, பகிரங்கமாக அறிவித்தல் விடுவதானது பிழையானதொரு விடயமாகும்.

மிகப் பெரியதொரு சோதனை காலத்தில் நாம் இருக்கின்றோம். இவ்வாறானதொரு நேரத்தில் மாகாணசபைத் தேர்தலில் நமக்கான பதவியென்ன, பட்டம் என்ன என்று பேசிக் கொண்டிருப்பது தேவையற்றதொரு விடயமாகும்.

கிழக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் எனும் விடயத்தினை தேவையற்றதொரு சந்தர்ப்பத்தில் நாம் பேசத் தேவையில்லை. ஒரு வருடத்துக்கு முன்பே இந்த முதலமைச்சர் விவகாரம் பற்றி பேசத் தொடங்கி விட்டார்கள்.

ஏற்கனவே, முஸ்லிம்கள் அதிக ஆசனங்களைப் பெற்றால் கிழக்கு முதலமைச்சர் பதவியினை முஸ்லிம்களுக்கே தருவதாக சொல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலைவரமுள்ளது. இதை அப்போது நாம் மிக ஏளனமாக விமர்சித்தோம்.

ஆனால், இப்படி உத்தரவாதமளித்து விட்டு முஸ்லிம் காங்கிரசினை ஏமாற்ற முடியாது. கடந்த முறை முதலமைச்சர் விவகாரத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் தனிமனிதர்கள். மிகப் பெரிய இயங்களாகப் பேசப்படும் கட்சிகளல்ல!

மு.காங்கிரஸ் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒப்பான – ஒரு சிறுபான்மை இனத்தின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கமாகும். இந்த இயக்கத்தை ஏமாற்றுவதென்பது சாமான்யமானதொரு விடயமல்ல.

மு.காங்கிரஸ் என்பது கையாலாகாத ஒரு போடுகாய் கட்சியாக இருக்க வேண்டும் என்கிற எதிர் பார்ப்போடுதான் கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்த கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கேற்றாற் போலதான் இப்போது வித்தியாசமான காய் நகர்த்தல்களும் நடந்து கொண்டிருக்கின்றன' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .