2026 மே 04, திங்கட்கிழமை

சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எவரையும் துரோகியென அழைக்க அருகதையற்றவர்கள்: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்ததுடன், வட கிழக்கில் கூட்டமைப்பின் செல்வாக்கை குறைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற சிவாஜிலிங்கம் போன்றவர்கள் எவரையும் துரோகி என்று அழைப்பதற்கு அருகதையற்றவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைவரும் சொக்கத்தங்கம் கிடையாது. பித்தளையில் தங்க முலாம் பூசப்பட்டவர்களும் உள்ளனர்.
கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றபோது அதன் தலைவர்களால் துரோகி என அறிவிக்கப்பட்டவர்கள் கூட பின்னர் அந்த தலைவர்களாலேயே அரசியல் நீரோட்டத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டதை சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு தெரியாமல் இல்லை. அந்த வகையில் மட்டக்களப்பில் இருந்து அமரர் தந்தை செல்வாவின் நினைவுதினத்துக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி சிவாஜிலிங்கம் துரோகி என நீட்டிய விரல்கள் அவரது நெஞ்சுக்கும் மாறி நிற்பதை அவர் அறிந்துகொள்ளவேண்டும்.

நாங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று உரசிப்பார்க்கும் நேரத்தில் இல்லை. இன்று நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக எமது மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ளவே முனையவேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலு இழக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழுமூச்சாக இருந்து ஆதரவு வழங்கிய சிவாஜிலிங்கம் போன்றவர்கள் மற்றவர்களை பார்த்துக் குறைகூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வேளையில் சிவாஜிலிங்கம் போன்றவர்களின் நடவடிக்கை தொடர்பில் அவர் சார்ந்துள்ள கட்சி விசாரணையை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எண்ணுகின்றோம். இவ்வாறானவர்களின் கருத்துக்கள் ஒரு சமூகத்தின் கருத்தாகவன்றி, ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தாகவே நோக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் ஒரு புனிதரின் நிகழ்வில் சிவாஜிலிங்கம் நடந்துகொண்ட விதத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .