Kogilavani / 2012 மே 03 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையில் நேற்று புதன்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது கற்களை வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு சொந்தமான வாகனமொன்று நேற்று மாலை வந்தாறுமூலையில் வைத்து அம்பலத்தடி எனும் வீதியை கடக்க முற்பட்ட பெண்கள் மீது மோதியதில் பெண்ணொருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒரு சிறுமியும் பெண்ணொருவரும் படுகாயமடைந்த சம்பவத்தையடுத்து இப்பிரதேசத்தில் பதற்ற நிலை அதிகரித்தது.
பொதுமக்கள் ஆத்திரமடைந்து குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்ற படையினரும், பொலிஸாரும் நிலைமைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தில் கற்களை வீசி வாகனத்தின் மீதும் படையினர் மீதும் தாக்குதல் நடத்திய மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் விடுவிப்பது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் பேசியபோது அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, இன்று வியாழக்கிழமை காலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதுடன் உயிரிழந்த பெண்னின் வீட்டிற்கும் சென்று நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர்.
வாகன விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியும் பெண்ணையும் பார்வையிட்டதுடன் நேற்று மாலை அங்கு இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தில் படைத்தரப்பின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உதயகாந்தன் எனும் மாணவனையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .