2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கிழக்கில் பிரச்சினை இல்லை என்று கூறுவதற்கு தமிழ் மக்கள் சோரம் போக மாட்டார்கள்: துரைரெத்தினம்

Super User   / 2012 ஜூலை 12 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (ரி.லோஹித்)

"கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது என்பதையும் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக் கூறுவதற்கும்  பல தசாப்தங்களாக போராட்டம் நடத்தி வலியுடன் இருக்கும் தமிழ் மக்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சிரேஷ்ட  தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ் மக்களை பொறுத்தமட்டில்  கடந்த காலத்தில் தமிழ்த்; தேசியத்தை பலப்படுத்தவதற்காக முகம் தெரியாமலும்  வற்புறுத்தலுக்கு பணியாமலும்  சொந்தபந்தம் பாராமலும்  எமது தேசியத்தை பலப்படுத்த வாக்களித்தனர். கடந்த காலத்தில்; ஒவ்வொரு குடும்பங்களும் ஒவ்வொரு விதத்தில் தமிழ்த் தேசியத்தை பாதுகாக்க உயிரூட்டியவர்கள், இதனால் பல குடும்பங்கள் இந்த இழப்பில் இருந்து இன்னமும் மீளவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில்  மௌனமாக இருந்த சர்வதேசமும் எமது நலன்விரும்பிகளும், ஏன் இலங்கை அரசையும் கூட கடைசித் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு நீங்கள் அளித்த வாக்குகளின் மூலம் கண்திறக்க வைத்துள்ளீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் கிழக்கு மாகாணசபை முறைகேடாக கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாணத்தைப் பொறுத்தமட்டில் மூவின மக்களும் வாழ்கின்றனர். தமிழ் மக்களை பொறுத்தவரையில்  இன ஜக்கியத்துடனேயே வாழ்வதற்காக பல விட்டுக்கொடுப்புகளை செய்தவர்கள். இந்த விட்டுக்கொடுப்பினால்  தமிழ் மக்களை பாதித்த பல விடயங்களும் உள்ளன. கடந்த காலத்தில் தமிழ் மக்களை புறந்தள்ளி வடகிழக்கில் ஆட்சியை நிலைநாட்ட முற்பட்ட அரசு நாட்டைப் பாதுகாக்க முடியாமல் போனதே வரலாறாகும்.

எனவே எமது மக்ளுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்துத் தமிழ் மக்களும் தங்களது ஒற்றுமையையும் பலத்தையும் காண்பிக்கக்கூடிய தேர்தலாக  பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச அரங்கில் தமிழ் மக்கள் மீதான பார்வையும் பதிவும் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் ஜெனீவா தீர்மானத்தின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கை விவகாரத்துக்காக  அமெரிக்கா, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டும்  இந்தியக் தூதுக்குழு இலங்கை வந்துசென்று, இராஜதந்திர நகர்வுகள் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக  வெளிச்சத்துக்குவரும் நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கான அழைப்புடன், தீர்வு விடயம் தொடர்பான ஆரம்பக்   கருத்துக்கள் வலுவடைந்திருக்கின்றது.

வட கிழக்கு  விடயம் உட்பட ஏனைய அதிகாரப் பரவலாக்கலை செயல்படுத்த காலம் கனிகின்ற நிலையில் மத்திய அரசு இந்த சாதகமான நிலைமையை இல்லாதொழிப்பதற்கு கிழக்கு மாகாணம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது எனக்காட்டி வடக்கில் மட்டும் பிரச்சினை உள்ளது என்பதையும் மாகாணசபையை கலைத்து தேர்தலை நடத்தி கிழக்கில் பிரச்சினை இல்லை எனக்கூறுவதற்கும்  பல தசாப்தங்களாக போராட்டம் நடத்தி வலியுடன் இருக்கும் தமிழ் மக்கள் எவரும் சோரம் போகமாட்டார்கள்.

இவ்வாறான நிலையில் அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்க தமிழ் மக்களாகிய நாங்கள் திடசங்கற்பம் பூணவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ இந்தத் தேர்தல் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டால் தமிழ்  சமூகம் எமது போராட்ட வலிமையையும் வலிமைமிக்க தியாகத்தையும் பறைசாற்றுவதற்கு  ஒரே முடிவு ஒற்றுமையாக வாக்களிப்பதே ஆகும். மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைய வேண்டுமானால் எமது சமூகம் விழிப்படைந்த நிலையில் 100 வீதம் வாக்களிப்பதே தீர்வாகும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள்  சோரம் போபவர்கள் அல்ல என்பதனையும் சர்வதேசத்திற்கு  தமிழ் மக்கள் பறைசாற்றியாக வேண்டுமானால் 6 ஒரு வாக்கை கூட தமிழ் மக்களின் உரிமையை இல்லாது ஒளிக்க அரசுடன் கூட்டுச் சேர்ந்துள்ள   சுயநலவாதிகளுக்கு அளிக்காமல். எமது உரிமையை நிலைநாட்டும் தமிழ்த் தேசியத்திற்கே வாக்களிக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் எமது மக்கள் ஒட்டுமொத்தமாக தமிழ்த் தேசியத்திற்கு வாக்களித்தால் மட்டுமே சர்வதேசம்  எமக்குச் சார்பாக பல செயற்திட்டங்களை முன்வைக்கும.; அந்த அளவிற்கு இந்தத் தேர்தலை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பார்க்கவேண்டிய தேவையும் உள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உரிமைகள் தொடர்பான பல விடயங்களும் நகர ஆரம்பித்திருக்கின்ற சந்தர்ப்பத்தில், பொது அமைப்புக்கள், சங்கங்கள்,  குழுக்களும்  தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் சுயமாகவே இறங்கிச் செயற்பட வேண்டிய கட்டாயமும் உருவாகியிருக்கிறது. பல அமைப்புக்கள் இதை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்

எனவே கிழக்கு மாகாணத்தில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள 85 ஆயிரம் வாக்காளர்கள்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2 இலட்சத்து 55 ஆயிரம்  வாக்காளர்கள், திருகோணமலை மாவட்டத்தில் 80 ஆயிரம் வாக்காளர்கள் என  மொத்தமாக 3 இலட்சத்து 80 ஆயிரம் தமிழ் வாக்களர்கள் பதிவாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்தால் பெரும்பான்மை பலத்தைப் பெறமுடியும்.  முஸ்லிம், சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக வாக்குகளை அதிகமாக அளிக்க இருப்பதால் அதை பெறப்போகும்  கட்சிகளுடன் பொது உடன்படிக்கை செய்து      ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு  எமக்கு உருவாகும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குகளை தமிழ்த் தேசியத்திற்கு அளியுங்கள்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .