2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் உள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தை விரும்பும் மக்களிடையே கவலையை தோற்றுவித்துள்ளது என காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நேற்று புதன்கிழமை  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை,  செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் ஆகியோர் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டிய குடியிருப்புக்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்பு சம்பவத்திற்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவிக்கின்றது.

கடந்த 30  வருடங்களாக  இடம்பெற்றுவந்த இன முரண்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் அடங்குகின்றனர். உயிர் மற்றும் உடைமைகளையும் இழந்தது மாத்திரமல்லாமல், தமது வாழ்விடங்களைக்கூட இழந்து அகதி என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக நாட்டின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழ்ந்துவருகின்றனர்.

தற்போதைய சமாதான சூழலில் தமது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறிக்கொண்டிருக்கும் உன்னிச்சைப் பகுதியின் இறுநூறுவில் கிராம முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் தொடர்ந்தும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே கடந்த 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறையில்லமான இறுநூறுவில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தீ வைப்பு சம்பவத்தை கருதவேண்டியுள்ளது. இந்தச் செயலை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்தச் சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானத்தை விரும்பும் மக்களிடையே கவலையை தோற்றுவித்துள்ளது. அத்துடன,; இது தேர்தல் காலமாக இருப்பதால் இனக்கலவரத்திற்கான ஒத்திகையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தினையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும்.

மேலும் இது தொடர்பில் மிகப் பொறுப்புடனும் கரிசனையுடனும் நடந்துகொண்ட பொலிஸ் திணைக்களம், இராணுவ படையினர், விசேட அதிரடிப்படையினர், அரசியல்த் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பொறுப்புணர்ச்சியுடனும் நிதானத்துடனும் இந்தச் செய்தியை உலகறியச் செய்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .