2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

எனது பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடம் செய்ய சிலர் முயல்கின்றனர்: பசீர்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன். எனது ஏறாவூர் பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடத்தை செய்ய சிலர் முயல்கின்றனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நான் ஏறாவூரில் பேசிய பேச்சை சிலர்  தவறாக விளங்கிக்கொண்டு அதை வைத்து அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்துத்தனமாகும்.

இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் என இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.  அந்தத் தருணத்தில் எனது சொந்த ஊரான ஏறாவூரை ஒற்றுமைப்படுத்துவதற்காக ஏறாவூர் நகரசபை தலைவர் அலிசாஹீர் மௌலானவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கவிரும்பினேன். அந்த வகையில் இதற்கான பேச்சுவார்த்தையிலும்; ஈடுபட்டேன். இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.

இந்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் இணைந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இருந்த சூழ்நிலையில், அலிசாஹீர் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்டார்.

இதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்தபோது, அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட முன்வந்தாலும் அவர் ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இட்ட காரணத்தினால் அதை அங்கு இரத்துச்செய்துவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் களமிறங்க முன்வந்தார்.

எனினும் இரண்டு கட்சிகளிலும் கையொப்பம் இட்டால் சட்ட ரீதியாக அவரின் பெயர் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினாலும் அவர் அங்கு வெளியே வரமுயாமல் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வருவதற்கு செய்த தியாகங்களையும் அவர் காட்டிய ஆர்வத்தையும் நான் நன்றியுடன் பார்க்கின்றேன்.

இந்தத் தேர்தலின் பின்னர் அலிசாஹீர் மௌலானாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதற்கு முயற்சிக்கின்றேன். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிப்பவர்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஏறாவூரில் கேட்கும் வேட்பாளர் நசிர் ஹாபீசுக்கும் வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹீர் மௌலானாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதையே கூறினேனே தவிர வெற்றிலைக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டபோது கதிரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளேன்.  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டபோது யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளேன்.

இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்த சின்னமான மரத்தில் போட்டியிடுகின்றது. இதனால் நான் ஏன் வேறு ஒரு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறவேண்டும்.

ஏறாவூரில் இரண்டு கட்சிகளிலும் இரண்டு பிரதிநிதித்தவத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் ஏறாவூரில் மிக நீண்டகாலமாக எனக்கும் மௌலானாவுக்கும் உள்ள அரசியல் முரண்பாட்டையும் இல்லாமல் செய்யும் வகையிலுமே அவ்வாறு பேசினேன்.

இதை சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் கபடத்தனம் செய்பவர்கள் தவறாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளார் என பசப்பித் திரிகின்றனர்.

அமைச்சர் ரிசாட் பதியுதீனும் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனையே பசப்பியுள்ளார்.

எனது பேச்சை இவர்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.  அரசியல் தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குரோத்துத்தனம் இவ்வாறானவர்களிடமிருந்து வெளிப்படும.; அதுவே இப்போது இவர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிப்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றியடையச்செய்ய வேண்டும்.
மிகவும் தீவிர தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக ஈடுபடுவேன். எவருடைய சொந்த நலன்களுக்காகவும் அல்ல என்பதை தெளிவாகக் கூற விரும்புகின்றேன்.

மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் இலட்சியப் பாதையில் இந்த கட்சியின் ஊடாகப் பயணிக்கின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .