2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை மட்டக்களப்புக்கு விஜயம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                  (ரி.லோஹித்)
மட்டக்களப்பின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளதால் அதில் கலந்து கொள்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்படவுள்ள இப்பாலத்துக்கான ஆரம்ப வேலைகளை அண்மையில், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடங்கி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பாலம் 210 மீற்றர் நீளமாகவும் 9.8 மீற்றர் அகலமாக அமையவுள்ளதுடன், மேற்குப் பக்கம் 195 மீற்றர் அத்துடன் கிழக்குப் பக்கம் 293 மீற்றர் நீளமும் கொண்ட தாம்போதிகளும் அமையவுள்ளன.

இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .