2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

எனது உயிர் இருக்கும்வரை சேவை செய்வேன்: சந்திரகாந்தன்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

உள்ளுராட்சி மன்றங்களை அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களே பலமானதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அதனது முழுமையான பயனையும் மக்களே அனுபவிக்க முடியும். எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன்.  என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின்(கொக்கட்டிச்சோலை) புதிய அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கழந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதேச சபையின் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டு மாநகர சபை உட்பட 8 தமிழ் உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றியது. அதன் பின்னர்தான் உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன? அதன் பயன்பாடு மக்களுக்கான உறவு என்ன? என்பதை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டார்கள்.

அதற்கு முன்னர் இந்த மன்றங்களை ஆட்சி செய்த 'தமிழ் கட்சி' என்று சொல்லப்படுகின்ற கட்சியினரால் அச் சபைகளை சரியாக நிருவகிகக் முடியவும் இல்லை அதனை அவர்கள் சரிவர செயற்படுத்தவும் இல்லை. ஏன் நான் இதனை குறிப்பிடுகின்றேன் என்றால், பெரும்பாலான சபைகள் சாதாரண கட்டிடங்களில்தான் இயங்கிவந்திருக்கின்றன. அலுவலக செயற்பாடுகளை சரிவர அவர்கள் செய்யவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமளிதுமளி என்ன காரணம்


மக்களுக்கான சரியான சேவைகளை வழங்க வேண்டும் என்றால் தானே அவர்கள் அலுவலகக் கட்டிடங்களை புதிதாக அமைத்திருப்பார்கள். அவர்களுக்கு அது எல்லாம் தேவையில்லை. ஏன் இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை எடுத்துப் பாருங்கள்,ஆலயடிவேம்பு பிரதேச சபையில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்;கடிக்கப்பட்டிருக்கிறது.

நாவிதன்வெளி பிரதேச சபையில் தற்போது அமளிதுமளி என்ன காரணம் என்றால் பொருத்தமற்ற பதவி நியமனம் என்கின்றார்கள்.

திருகோணமலை நகராட்சி சபையில் ஊழல் இப்படியே வெருகல் பிரதேச சபையில் சாதாரண குடிநீர் வழங்கக்கூட தவிசாளர் எரிபொருள் செலவு கேட்கின்றாராம். எப்படி நிலைமை என்று பாருங்கள். முழுக்க முழுக்க மக்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் உள்ளுராட்சி மன்றங்கள். அதனை ஆட்சி செய்பவர்கள் சரியாக வழிநடாத்தாவிட்டால் அதனை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். ஏன் எனில் உங்களது வரிப்பணத்திலே அவர்கள் நிருவாகம் செய்கிறார்கள்.

 உங்களுக்கு சிறப்பான சேவையை அவர்கள் ஆற்ற வேண்டும். இல்லையாயில் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும். அதுதான் நான் சொல்கின்றேன் உள்ளுராட்சி மன்றங்களை வலுவுள்ள ஆழுமை மிக்க சிறப்பான சபையாக மாற்ற வேண்டிய பொறுப்பு அப் பிரதேசத்தைச் சார்ந்த மக்களேயே சார்ந்ததாகும் .

பிள்ளையான் என்ன செய்கின்றான்

பழம்பெருங்கட்சி என்று தங்களை பறைசாற்றுகின்றவர்கள் பிள்ளையானுக்கு என்ன தெரியும் அவர் அரசியலுக்கு குழந்தை என்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் நான் அரசியலுக்கு புதியவன்தான் ஆனால் மக்களுக்கு அல்ல. அதாவது மக்களுக்குத் தெரியும் பிள்ளையான் என்ன செய்கின்றான். அரசியல் எப்படி பேசுகின்றான் என்று எனது மக்களுக்குத் தெரியும்.

கடந்த மாகாண சபை அமர்விலே நான் பேசியிருந்தேன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 பேரால் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நான் ஒருவன் தனியே இருந்து கொண்டு கிழக்கு மகாண தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாமே செய்வேன் என்று அவர்களுக்கு சொல்லி வைத்தேன். நான் இப்பவும் சொல்கின்றேன் எனது உயிர் இருக்கும்வரை நான் மக்களுக்காவே சேவை செய்வேன் இவர்களைப் போல் சந்தார்ப்பவாத அரசியல் செய்யமாட்டேன்.

பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே
!

அரசுடன் இணைந்திருந்தாலும் மக்களின் அதிகாரப் பகிர்வு விடத்திலும் அவர்களது உரிமை விடத்திலும் எப்படியான போக்கை நான் கடைப்பிடித்தேன். என்று கடந்த கால மாகாண சபை ஆட்சி சான்று பகரும். ஏன் இதனை நான் சொல்கின்றேன். என்றால் அவர்கள் ஒருவரியில் சொல்வார்கள் பிள்ளையான் அரசாங்கத்து ஆள்தானே! என்பார்கள். அரசுடன் இணைந்திருந்தாலும் மக்கள் நலனே எனது குறிக்கோள். இன்று யார்யாரெல்லாம் கிழக்கில் ஜனநாயகம் இல்லை அபிவிருத்தி இல்லை என்கின்றார்கள்.

நான் கேட்கின்றேன் இப்படிச் சொல்பவர்களுக்கு மட்டக்களப்பில் நடப்பதை பார்க்க கண் இல்லையா? அல்லது மட்டக்களப்பைத் தெரியாதா? என எண்ணத் தோன்றுகிறது. கிழக்கு மக்களுக்கு தெரியும் கிழக்கில் எவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அம் மக்களுக்கத் தெரிந்தால் போதும்.

கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள்


ஜனநாயகம் ஜனநாயம் என்று நிமிடத்திற்கு ஒரு முறை உச்சரிக்கும் எனது அன்பான தமிழ் தேசியக் கூட்டமைப்ப உறுப்பினர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கிழக்கின் ஜனநாயகத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்றாக தெரியும். இல்லாவிட்டால் பல கொலைகளைப் பரிந்து தப்பியோடியவர்கள் எல்லாம் மக்களிடம் வாக்கு கேட்கின்ற நிலைமை கிழக்கில் இருக்கு என்றால் அங்கே எந்தளவுக்கு ஜனநாயகம் இருக்கு என்பதனை அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.

எங்கையா உங்கட ஜனநாயகம்?


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகம் எங்கே? கடந்த மாகாண சபைத் தோர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். இரா. துரைரெட்ணம் பெற்ற வாக்குகள் 29131 ஆகும். அடுத்தபடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி மற்றும் மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் இணைத் தலைவருமான துரைராஜசிங்கம்; இவர் பெற்ற மொத்த வாக்குகள் 27,717 ஆகும். திருகோணமலை மாவட்டத்தில் தண்டாயுதபாணி பெற்ற வாக்குகள் வெறும் 20,190 ஆகும். ஆனால் இவருக்கு எந்தவொரு அரசியல் அனுபவமும் இல்லை பின்னணியும் இல்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கப்பட்டது. வெறும் 20,000 வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கே வழங்கப்பட்டது. அப்ப எங்கையா உங்கட ஜனநாயகம்?

நீ உன்னிடம் இருந்தே தொடங்கு


உண்மையில் இதனடிப்படையில் பார்த்தால் முதலாவதாக துரைரட்ணத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். சரி அவர் பிற கட்சிக்காரர் என்ற படியால் அவருக்கு கொடுக்கவில்லை. ஓரளவு நியாயம் என்றாலும், முழுக்க முழுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூண் என்று சொல்லப்படுகின்ற அனைத்து திறமைகளும் உள்ள துரைராஜசிங்கத்திற்காவது வழங்கி இருக்க வேண்டும்.

அதனையும் செய்யாமல் வெறும் 20190 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தண்டாயுதபாணிக்கு கொடுத்தது. நியாயமா? அல்லது ஜனநாயகமா? இதைக் கேட்டால் அது கட்சி முடிவாம். அப்படி என்றால் அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பில்லையா? அதாவது மக்களின் வீரப்புக்கு அங்கே இடம் இல்லையா? தங்களது கட்சிக்குள்ளே ஜனநாயகத்தைப் பேணமுடியாதவர்கள்  ஜனநாயகம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என தாங்களே சிந்தித்தால் போதும். 'பிறருக்கு உபதேசம் செய்யும் போது அதனை நீ உன்னிடம் இருந்தே தொடங்கு' என்றார்.


  Comments - 0

  • rima Sunday, 30 December 2012 07:22 AM

    உயிர் இருக்கும்வரைக்கிம் தமிழ் மக்களுக்கு முடிவுகிடைக்காது.

    Reply : 0       0

    Sumathy m Sunday, 30 December 2012 04:25 PM

    பிள்ளையான் அவர்களே, வாழ்த்துக்கள். மனம் திறந்து பேசியிருக்கிறீர்கள். நன்றி, நீங்கள் அரசியலுக்கு புதிதுதான், உண்மை. ஆனால் எமது மக்களுக்கு அவர்களின் அவலங்கள் தீர அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறீர்கள். தமிழ் அரசியலில் வன்முறையை தூண்டி தமிழ் மக்கலை முள்ளிவாய்க்கால் வரை கொண்டுபோய் விட்டவர்கள் தமிழ் தலைவர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள். உதட்டளவில் தான் அவர்களது ஜனநாயகம். உங்கள் பணி தொடரட்டும்
    சுமதி

    Reply : 0       0

    sri Monday, 31 December 2012 04:55 AM

    தண்டாயுதபாணி அவர்களிற்கு தலைமைபதவி கிடைத்தது ,11 பேரும் சேர்ந்து எடுத்த ஒருமனதான முடிவு. பிள்ளையான் மாகாண சபை பஜெட் விவாதத்தின் பொது உறுப்பினர்களுக்கு ஒதுக்கும் 20 லட்சத்தை TNA உறுப்பினர்களுக்கு வழங்ககூடாது என்று
    பேசியவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X