2026 மே 04, திங்கட்கிழமை

தமிழ் - முஸ்லிம்கள் ஒருமித்து உரிமைக்காக குரல்கொடுக்கும் தருணம் ஏற்பட்டுள்ளது: றிசாத்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரைவப் பெற்றிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற விடயத்திலே எங்களுடன் பேச வேண்டும். நாங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருமித்து இந்தத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற தருணம் இப்போது வந்துள்ளது' என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், 'தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி  இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும்' என்றார்.

'தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்றுபட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ்வதற்கு நாங்கள் படாதபாடு படுகின்றோம். ஆனால் இந்த விடயத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒத்துழைப்புப் போதுமானதாக இல்லை. இந்த இடத்திலே நாங்கள் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.

உங்களுடன் ஒருசேர இருந்து தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். இனியும் நாங்கள் அர்த்தமில்லாமல் பிளவுபடுட்டு நிற்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் பலவீனப்பட்டு அழிய முடியாது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் எங்களோடு இது விடயமாகப் பேச முன் வரவேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒற்றுமையாக வாழவேண்டும். இதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள். ஒன்றிணைவோம் வாருங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.

'இந்த நாடு பிளவுபடக் கூடாது என்பதிலே முஸ்லிம் சமூகம், மிகக் கவனமாக இருந்திருக்கின்றது. அன்றைய பேரினவாதத் தலைமைகள் இனவாதத்தைக் கக்கியதனால் ஆயுதமேந்திப் போராட வேண்டிய துரதிருஷ;டம் ஏற்பட்டது. 30 வருடங்கள் பேரழிவும் சின்னா பின்னமும் உண்டானது. நான் இப்பொழுது இரவில் உறங்குவதில்லை. ஏனென்றால் எங்காவது முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் நடந்து விடும் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதால் எனக்குத் தூக்கமே வருவதில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

'இப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30, 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.

கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்று சொன்னோம். சட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0

  • mattakkalappaan Sunday, 31 March 2013 02:12 AM

    நாம் அனைவரும் இலங்கையர் என சிந்திக்காதவரை எதுவும் நடக்காது. ஒரே நாடு ஒரே மக்கள்... பிரிவினை வேண்டாம்.

    Reply : 0       0

    vallarasu Sunday, 31 March 2013 05:44 AM

    ஐயா... கட‌ந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது அவர்கள் இதைத்தான் சொன்னார்கள். நீங்க ஏற்கவில்லையே... கல்யாணத்திட்கு மாலை போடாமல், பிணத்திட்கு மாலை போடப் போறீங்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .