2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்தது

Kogilavani   / 2014 மார்ச் 03 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.சசிகுமார்


மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் திங்கட்கிழமை (3) காலை நடத்திய வேலை நிறுத்தம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி வழங்கிய வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது.

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் போக்குவரத்து பேரூந்தொன்றின் உரிமையாளரினால் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்கிய நபரை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும் மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் திங்கட்கிழமை காலை (3) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனியார் போக்குவரத்து நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாநகரசபை சுகாதார தொழிலாளர்கள் அங்கு மாநகர சபையின் இயந்திரங்களை நிறுத்தி அவ்விடத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு சமூகமளித்த மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு மாநகரசபை சுகாதார தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை ஊழியரை தாக்கிய தனியார் போக்குவரத்து பேரூந்தின்; உரிமையாளரை 24 மணித்தியாலங்களுக்குள் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோருக்கு உறுதிமொழி வழங்கியதையடுத்து வேலை நிறுத்தம் 8.45 மணியளில் முடிவுக்கு வந்தது.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், கே.துரைராஜ சிங்கம் ஆகியோரும் இங்கு சமூகமளித்திருந்தனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் போக்குவரத்துசாலையில் கடமையாற்றும் மாநகர சபை சுகாதார ஊழியரே தாக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X