2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'முன்பள்ளி ஆசிரியர்களின் குறைகள் நிவர்த்திசெய்யப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சேவை, தொழில் அடிப்படைகளிலும்; நல்லெண்ண நோக்குடன் பல சிரமங்களுக்கு மத்தியில் குறிப்பாக, பொருளாதார நிர்ப்பந்தத்துக்கு மத்தியில் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிப்பதோடு, அவர்களின் குறைகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அவர் நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நீண்டகாலமாக பல சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக கடந்த கிழக்கு மாகாணசபையில் ஒரு நியதிச்சட்டம் உருவாக்கி கொள்கைகளை வகுத்து அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாலர் பாடசாலை கல்விப்பணியகம் உருவாக்கப்பட்டு அதனூடாக முன்பள்ளி கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளில் 1500 க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்களில்; அநேகமானவர்களுக்கு தராதரங்கள்; இருந்தும் குறிப்பிட்ட சிலருக்கு டிப்ளோமா சான்றிதழ்  பெறுவதற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் பணியகம் நடவடிக்கை எடுத்துவந்தது.

இவ்வேளை, இவ் ஆசிரியர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதற்கும் இப்பணியகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டத்தில்  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபாய் கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு மீண்டும் புதிய அரசின் வரவு - செலவுதிட்டத்தின் மூலம் ரூபாய் 250 மேலதிகமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் இது தொடர்பாக இன்றுவரை இவ் ஆசிரியர்களுக்கு இவ்விடயத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை.

இவ்வகையில்,

1)மாகாணசபையால் மாதம் மாதம் வழங்குவதற்கு முடிவெடுத்த கொடுப்பனவை தாமதப்படுத்தாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
2)டிப்ளோமா பாடநெறியை பூர்த்திசெய்யாமல் இருக்கும் ஏஞ்சியுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்ச்சிநெறியை முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
3)மத்தியஅரசால் வரவு -செலவுதிட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு கொடுப்பனவை வழங்குதல். இதன் பிரகாரம் 2015ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட வரவு –செலவுத்திட்டத்தில் 2500 ரூபாய் நிதி ஒதுக்கீட்டை வழங்குதல்
4)இடைக்கால நூறுநாள் வரவு -செலவுதிட்டத்தில்; மேலதிகமாக 250 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
5)மாகாண முதலமைச்சரின் கீழ் முன்பள்ளிப்பிரிவு தற்சமயம் உள்வாங்கப்பட்டுள்ளதால் இதை மாற்றி கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதோடு, முன்பள்ளி ஆசிரியர்களை முறையான ஆசிரிய சேவைக்குள் உட்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை துரிதமாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X