2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுபான்மையினர் மீதான இனவெறுப்புப் பிரசாரத்திலே சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்துள்ளது: பஷீர்

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுபான்மையினர் மீதான இனவெறுப்புப் பிரசாரத்திலே சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்துள்ளதென தான் கருதுவதாக முன்னாள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

'வடபுலத்து முஸ்லிம்களின் தடையற்ற மீள் குடியேற்றத்துக்கான ஆதரவுக்குரல் வில்பத்து விவகாரம் ஆயிரம் அம்புகள்' எனும் தொனிப் பொருளில் அமைந்த பகிரங்க விளக்கமளிப்புக் கூட்டம் ஏறாவூர் வாவிக் கரையோரப் பூங்காவில்; சனிக்கிழமை (30) நடைபெற்றது.

ஏறாவூர் அஷ்ரப் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டம், அதன் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர்க் கிளை கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல். முஹைதீன் பாபா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

ரொபஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனவெறுப்புப் பிரசாரத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக அந்நாட்டு சாதாரண பௌத்த மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, இன்று அது வெற்றியடைந்திருக்கின்றது.

அதுபோன்றுதான் இலங்கையில் ஹலால் விவகாரத்தைக் கொண்டு தொடங்கிய முஸ்லிம் இனவெறுப்புப் பிரசாரம், பேரினவாத சிங்கள பௌத்தர்களால் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இலங்கையில் சிறுபான்மையினர் மிக அவதானமாக இருக்க வேண்டும். எப்பொழுதுமே உலகின் எப்பாகத்திலும் வளர்ந்து வருகின்ற பெருந்தேசிய வாதத்தில் அகப்படுவது சிறுபான்மையினர்தான். பெருந்தேசிய வாதத்தின் எழுச்சியிலே, அதன் கொள்கை வகுப்புக்களிலே, அதன் உக்கிரத்திலே சிறுபான்மையினர் அகப்படாமல் மிக அவதானமாக இருந்து விட வேண்டும்.

இத்தகைய ஒரு அனுபவப் பாடத்தை நமது முன்னோடிகளான அரசியல் அறிஞர்கள் நமக்குக் காட்டித் தந்திருக்கின்றார்கள். நமது முன்னோர்களான முஸ்லிம் அரசியல் தலைவர்களை சிங்கள மக்கள் நம்பினார்கள். அதற்குக் காரணம் அவர்களது அரசியல் சாணக்கியம்தான்.

சிங்களப் பெருந்தேசியவாதத்திற்குள் அகப்படாமல் அவர்கள் ஆழ்ந்த அறிவோடு சிறுபான்மையினரான முஸ்லிம்களைக் காத்தார்கள்.

இன்று முஸ்லிம்கள் அநியாயக்காரர்கள், முஸ்லிம்கள் கொள்ளையர்கள், முஸ்லிம்கள் வந்தேறுகுடிகள், ஆகையினால் அவர்கள் அரபு நாடுகளுக்குப் போக வேண்டும். தமிழர்கள் வந்தேறு குடிகள், அவர்கள் தமிழ் நாட்டுக்குச் செல்லவேண்டும். இப்படியெல்லாம் இன வெறுப்பைக் காட்டி வருகின்றனர் பேரினவாதிகள்.

ஆயினும், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களுக்கு முன்னாலுள்ள பேராபத்தை உணர்ந்து மிக நிதானமாகவும் விவேகத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.

வடபகுதியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் வரை நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் போராடியே ஆகவேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .