2025 மே 14, புதன்கிழமை

‘இனவாத சுவர்களை இடித்தாலன்றி, இந்நாட்டுக்கு விமோசனமில்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமாயின், சில இனவாதிகளின் மனங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இனவாதச் சுவர்களை இடித்து அழிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இதற்கான பொறிமுறை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் அதுவரை இந்நாட்டுக்கு விமோசனமில்லையென்றும் அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில், இனவாதம் காரணமாக, வெறுப்புணர்வுகள் மேலோங்கியுள்ள நிலையில், நாட்டில்  அபிவிருத்திகள் முதலீடுகள் குன்றிப்போய் நாடு நலிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

2018ஆம் ஆண்டு, நவம்பரில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய நடப்பாண்டுக்கான (2019) வரவு - செலவுத் திட்டம் தற்போது  ஜனவரியில் பாதி நாள்கள் கடந்து விட்ட நிலையிலும் வரவு - செலவின்றி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இது நாட்டின் அபிவிருத்தியை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை சாதாரண ஒரு பாமரன் கூட அறிந்திருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக முதலீடுகள் இல்லை, புதிய உற்பத்திகள் இல்லை, பெரிய, நடுத்தர, சிறிய முதலீடுகள் இல்லை. புதிய உற்பத்தித் தொழிற் துறைகளுக்கான திட்டங்கள், முன்மொழிவுகள், வாய்ப்புகள் எதுவுமில்லை. ஒட்டுமொத்தத்தில் அரச தனியார் துறை அபிவிருத்திகள் அப்படியே முடங்கியுள்ளன என அவர் விசனம் தெரிவித்தார்.

எனவே, இந்நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் உள்நாட்டவரும் வெளிநாட்டில் இருக்கும் தேசப்பற்றாளர்களும் இந்நாட்டில் புரையோடிப்போய் புற்றுநோயாகியுள்ள இனவாத, இனவெறுப்பு மனப்பாங்குகளை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தும் திட்டங்களை முன்மொழிய வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .