2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெரியகல்லாறு விளையாட்டுக் கழகங்களால் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளரின் செயற்பாட்டைக் கண்டித்து, பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக் கழகங்களால் களுதாவளையில் உள்ள பிரதேச சபைக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று, இன்று (10) காலை முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில், கடினபந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிக்க சபை தீர்மானித்துள்ளதாக பெரியகல்லாறில் உள்ள 13 விளையாட்டுக் கழகங்களுக்கு தவிசாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தனர்.

எனினும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் குறித்த மைதானம் தொடர்பில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில், தவிசாளரால் எழுந்தமானமாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பிரதே சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலான கலந்துரையாடலுக்கு, இன்று காலை 10 மணிக்கு வருமாறு கோரி, பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு, தவிசாளரால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் இன்று காலை பிரதேச சபைக்கு வருகைதந்தபோது, பிரதேசசபை மூடப்பட்டிருந்ததுடன், கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை அழிக்கும் செயற்பாட்டை தவிசாளர் சிலரின் தூண்டுதலின் பேரில்முன்னெடுப்பதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வருகைதந்து, விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

இதில் எந்தவிதத் தீர்வுகளும் எட்டப்படாத நிலையில், பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

நாளை திங்கட்கிழமை (11), தமது பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்து விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால், தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

1994ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த மைதானத்தில் கடினபந்து கிரிக்கெட் விளையாடிவருவதாகவும் தற்போது தன்னிச்சையாக தவிசாளர் குறித்த மைதானத்தில் விளையாடுவதற்கு தடைவிதித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மைதான காணி ,1986ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், அக்காணியை பலர் அபகரித்துள்ள நிலையிலும் அருகில் தற்காலிகமாக வழிபடப்பட்ட கோவில் மதில் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதற்கு மட்டும் பிரதேச சபை தடை விதித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகல்லாறில் உள்ள 13க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள் மற்றும் கோவில்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .