2025 மே 26, திங்கட்கிழமை

வாகனேரி, புணாணையில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயச் செய்கை அழியும் நிலைமை

Suganthini Ratnam   / 2017 மே 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்;டத்தின் வடக்கு எல்லைப் பகுதிகளிலுள்ள குளங்களுக்குச் செல்லும் நீரை, இம்முறை சட்டவிரோதமான முறையில் மறித்து விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ளதால், வாகனேரி மற்றும் புணாணை நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழுள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயச் செய்கை கருகி நாசமாகும்; நிலைமை ஏற்பட்டுள்ளது என  விவசாயிகள் தெரிவித்தனர்.

சிறுபோகச் செய்கைக்காக பொலன்னறுவை மாதுறுஓயாக் குளத்திலிருந்து வாகனேரி மற்றும் புணானைக் குளங்களுக்கு வருடாந்தம் நீர் கொண்டுவரப்பட்டு, விவசாயச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மாதுறுஓயாக் குளத்திலிருந்து வாகனேரிக் குளத்துக்கு கொண்டுவரப்பட்ட நீரை,  இம்முறை புணாணை மேற்கு மற்றும் மயிலந்தனைப் பகுதிகளில் சட்டவிரோதமாக மறித்து, அப்பகுதிகளில்  வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
 
மாதுறுஓயாக் குளத்திலிருந்து இம்முறை திறக்கப்பட்ட 16 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர்,  மயிலந்தனையில் கடந்த வெள்ளிக்கிழமை மறிக்கப்பட்டதால், விலாலோடை அணை உடைப்பெடுத்து நீர் கடலுக்குச் செல்லும் அபாய  நிலைமை ஏற்பட்டது.

இதனை அடுத்து, இராணுவத்தினரின் உதவியுடன் மயிலந்தனையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத தடுப்பு அணையை விவசாய அமைப்புகள் அகற்றி, வாகனேரிக் குளத்துக்கான நீரைக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுத்துள்ளன. இந்நிலையில், உடைப்பெடுத்த விலாலோடை அணையை திருத்தியமைக்கும் பணியும் இன்று மேற்கொள்ளப்பட்டது.

மாதுறுஓயாக் குளத்திலிருந்து 16 ஆயிரம் ஏக்கர் கன அடி நீர் மூலம் வாகனேரித் திட்டத்தின் கீழ் 8,456 ஏக்கரிலும் புணாணைத் திட்டத்தின் கீழ் 1,565 ஏக்கரிலும் இம்முறை சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மாதுறுஓயா நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்துக்கு வருடாந்தம் 40 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இம்முறை  வரட்சி காரணமாக 16 ஆயிரம் ஏக்கர் கனஅடி நீர் கொண்டுவரப்பட்டு விவசாயச் செய்;கை மேற்கொள்ளப்படுகின்றது என வாகனேரி நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ குழுத் தலைவர் சிவலிங்கம் புஸ்பாகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X