2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

'ஆறு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படும்'

Kogilavani   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

'எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது, அம்பகமுவை மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் பிரிக்கப்பட்டு, புதிதாக ஆறு பிரதேச சபைகள் உருவாக்கப்படும். அச்சபைகளில் மக்கள் பிரதிநிதிகளாக எமது இளைஞர்கள் பங்குக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்  மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

'அம்பகமுவை பிரதேச சபை பிரிக்கப்பட்டு மூன்று புதிய பிரதேச சபைகளாகவும் நுவரெலியா பிரதேச சபை பிரிக்கப்பட்டு மூன்று புதிய பிரதேச சபைகளாகவும் உயர்த்தப்பட்டு மலையக இளைஞர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மாறி, அனைத்து பிரதேச சபைகளுக்கும் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

இதனூடாக மலையக மக்களின் குரல் பிரதேச சபைகளிலும் ஒலிக்கப்படும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெருந்தோட்டங்களில் அமைக்கப்படும் 4,000 வீட்டுத் திட்டத்தில் முதல் கட்டமாக 404 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா - பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஒரு காலத்தில் நாம் நாடற்றவர்களாக வாழ்ந்து வந்தோம், இலங்கை எமது நாடா அல்லது இந்தியா எமது நாடா என புரியாதவர்களாக இருந்தோம். அந்த நிலை மாற்றியமைக்கப்பட்டது. பின்னர், வீடற்றவர்களாக வாழ்ந்தோம். இன்று அனைத்து நிலைமைகளும் மாற்றப்பட்டு நாடுள்ளவர்களாகவும் சொந்த வீடுகளையுடையவர்களாகவும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். இவையாவும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் மட்டுமே சாத்தியப்படுத்த முடிந்தது.
கடந்த 14 வருடங்களாக அமைச்சராக இருந்தவர் செய்யாத செயற்பாடுகளை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏழே மாதங்களில் செய்து காட்டியிருக்கிறது' எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

'இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம்  தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடி மலையக மக்களுக்கான  4,000 வீட்டு திட்டத்துக்கு  இறுதி முடிவை எடுத்தது. இதனால் இன்று ஆரம்பக்கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குத்தகை அடிப்படையில் பேரம்பேசும் நிலையில் நாம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை. பணத்துக்காக விலைபோகவுமில்லை.  

இந்திய அரசாங்கத்துடன் சுமூகமான உறவையும் பொது நலத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வீட்டு திட்டத்துக்கான பேச்சுகளை ஆரம்பித்தோம். இதன் பயன், இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில்  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டியமைக்கப்படும் தனி வீட்டுத் தொகுதிக்கு„அண்ணல் மகாத்மா காந்திபுரம் என பெயர் சூட்டப்படவுள்ளது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .