2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'தனி வீட்டுத்திட்டத்தை வேகமாக முன்னெடுக்கலாம்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் குரலெழுப்புகின்றோம்' என தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், 'ஒருவரை அனுப்பி இன்னொருவருக்கு விடுமுறை விண்ணப்பிப்பதற்காக அல்ல' எனவும் கூறியுள்ளார்.

'இருநூறு வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக தமது உழைப்பை வழங்கிவரும் மலையகப் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காக, பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனம் ஒன்று இதுவரை இருக்கவில்லை.
அந்த குறையை நீக்கும் வகையில் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு, அரச அதிகார சபையை அமைப்பதற்கு தற்போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மலையக மக்களின் வரலாற்றில் இது வரலாற்று திருப்புமுனையாகும்' எனவும் அவர் கூறினார்.

பசும்பொன் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், ஹப்புத்தளை, பிட்டரத்மலை தோட்டத்தில்  66 வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்

மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர்,

'மகாவலி அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டது,   யுத்தத்தினால் இடம்பெயரந்;தவர்களை மீளக்குடியமர்த்த மீள்குடியேற்ற அதிகார சபை அமைக்கப்பட்டது,   தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய தென்மாகாண அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டது.
அதேபோல, மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான அரச அதிகார சபையை உருவாக்குவதற்கு அமைச்சர் திகாம்பரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவரைபுகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு  அனுப்பபட்டுள்ள குறித்த யோசனை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்ட ரீதியான அதிகார சபையாக விரைவில் அமைக்கப்படும்' என்றார்.

மலையக மக்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரச பொறுப்பில் எந்த ஒரு நிறுவனமும் இதுவரை இருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் மலையக சமூக ஆர்வலர்களிடத்தில் அதிகம் பேசப்பட்டப்போதிலும் அரசியல் ரீதியாக அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு ஒரு வருட காலத்துக்கு இந்த இலக்கு அடையப்பெற்றிருக்கிறது' என அவர் மேலும் கூறினார்.

'எதிர்வரும் காலங்களில் அரச நிதியீட்டத்திலும் மேற்பார்வையிலும் மலையகத்தில் புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும். மலையக மக்களின் அவலம் நிறைந்த லயத்து வாழ்க்கை முறையை இல்லாமலாக்கி, மலையகமெங்கும் தனிவீட்டுத் திட்டங்களை வேகமாக முன்னெடுக்க இந்த அதிகார சபை பெரும் வரப்பிரசாதமாக அமையும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .