2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரி பள்ளிவாசல் விவகாரம்: நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமா மகேஷ்வரி

இரத்தினபுரி, ஜீன்னத் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக கட்டடம் அமைக்கும் பணிகளை இரத்தினபுரி மாநகர சபை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இப்பள்ளிவாசலுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், இரத்தினபுரி மாநாகர சபையினால் நிர்மாணிக்கப்படவிருந்த கடைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாநகர சபையானது, மேற்படி பள்ளிவாயலின் வாகன தரிப்பிடத்தில் புதிததாக கடைத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகளை மாநகரசபை உத்தியோகப்பூர்வமாக சனிக்கிழமை (19) ஆரம்பித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்விடயம் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, கடைத்தொகுதியின் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாநகரசபைக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, கடைத்தொகுதி விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகமும் மாநகர சபையும் இணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்' என வெகுசன ஊடக பிரதியமைச்சர் சாந்த பண்டாரவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சபையின் முதல்வருமான அசோக ஜயவர்தன, 'நான் சொற்ப காலம் இரத்தினபுரி மாநகரசபை மேயராக இருந்த போதுதான் இக்கட்டட நிர்மாணப் பணிக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இந்த வாகனத் தரிப்பிடத்தில் எந்தவொரு கட்டடமும் அமைக்க முடியாது. அத்துடன் அக்காணியை பள்ளிவாயல் நிர்வாக சபையும் உரிமைக்கோர முடியாது  என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அவ்விடத்தில் கட்டடமொன்று அமைப்பது சிறந்தது அல்ல' என்றார்.

இரத்தினபுரி மாநகரசபையின் முன்னாள் மேயர் நிமல் தயாவன்ச கூறுகையில்;, 'வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
இவ்வாறிருக்க வாகனத்தரிப்பிடமொன்றில் கட்டடத்தை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இக்கட்டட நிர்மாணப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்துடன், மாநகர சபையே இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .