அஜித்லால் சாந்த உதய
வெள்ள அனர்த்த அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்டத்தில், மழை வானிலை குறைந்துள்ளதால் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்தாலும் வெள்ள அபாயம் இன்னும் நீங்கவில்லை என்றும் எனவே அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்குமாயின் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, நீர்ப்பாசனவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி நகரை அண்மித்து அமைந்துள்ள களுகங்கையின் நீர்மட்டம், இன்று (21) காலை 16 அடிக்கு காணப்பட்டதாக, அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் குறைந்து, தாழ்நிலப் பகுதிகளில் நீர் வற்றி வருகின்றன.
வெள்ளம், மண்சரிவு அபாயம், கடுங்காற்று காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி, இடைதங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள், தங்களது வீடுகளுக்கு மீள செல்லத் தொடங்கியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இன்று (21) வரை, 230 குடும்பங்களைச் சேர்ந்த 869 பேர், 16 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.