2026 மார்ச் 19, வியாழக்கிழமை

எரிபொருளை பதுக்கிய வர்த்தகர் கைது

Janu   / 2026 மார்ச் 18 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை - போகிட்டிய பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பெட்ரோல் மற்றும் டீசல் தொகையை, புதன்கிழமை (18) அன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மொனராகலை மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவினரால் போகிட்டிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த 120 லீற்றர் டீசல் மற்றும் 11 கொள்கலன்களில் (Cans) இருந்த பெட்ரோல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக போகிட்டிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடாத்தி வரும் 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீண்டகாலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை பெற்று, அதனை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இவர் இவ்வாறான பதுக்கலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட எரிபொருள் தொகையையும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் (பதில்கடமை) சேபால ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

 சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X