2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சென் ஜோன்ஸ் தோட்ட மாணவர்களுக்கு மேலதிக பஸ் சேவை

Kogilavani   / 2017 மே 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலையிலிருந்து நகர்புறங்களுக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கென, மேலதிக பஸ்கள், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக,
இலங்கை போக்குவரத்துச் சபையின் நுவரெலியா டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களை, பஸ் தரிப்பிடத்திலிருந்து முறையாக ஏற்றிச் செல்லுமாறு, இ.போ.ச. சாரதிகளுக்கு பணிப்புரை விடுக்கவுள்ளதாகவும், அவ்வதிகாரிகள் உறுதிமொழி வழங்கினர்.

மாணவர்களுக்கு சீரான ​பஸ் சேவையை ஏற்படுத்தித் தருமாறு கோரி, கந்தப்பளை மற்றும் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத் தொழிலாளர்கள், இராகலை - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  காலை 8 மணி முதல் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால், இராகலை -நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து, ஸ்தம்பிதம் அடைந்தது.  

இராகலை, கந்தப்பளை மற்றும் நுவரெலியா போன்ற பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் சென்ஜோன்ஸ் தோட்ட மாணவர்கள், பஸ்களில் பயணிப்பதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மேற்படி வீதி வழியாக பயணிக்கும் இ.போ.ச பஸ்கள், மாணவர்களை முறையாக ஏற்றிச் செல்வதில்லை.

இம்மாணவர்கள், காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதற்காக பஸ்களுக்கு காத்திருந்தாலும், அவ்வழியாக பயணிக்கும் பஸ்கள், இம்மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.  

குறித்தத் தோட்டத்திலிருந்து, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள்,  கல்வி நடவடிக்கைக்காக நகர்புறங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

எனவே, இதற்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியே, மாணவர்களின் பெற்றோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத் தந்த நுவரெலியா இ.போ.சபையின் உயர் அதிகாரிகள்,  சென்ஜோன்ஸ் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போதே, அதிகாரிகள் மேற்கண்ட  உறுதிமொழியை வழங்கினர். அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்ட இடத்துக்கு, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராமும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .