2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’சீனி கொள்ளை தொடர்பில் முறையான விசாரணை அவசியம்’

Kogilavani   / 2021 மார்ச் 17 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனி கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நுவரெலியாவில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன என்றும் இந்நிலையில் சீனி இறக்குமதி மூலம் வரிமோசடி செய்து அரசாங்கத்துக்கு கோடி கணக்கில் வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சாடினார்.

'மத்திய வங்கி கொள்ளையைக்காட்டியும் சீனிக்கொள்ளை பாரிய மோசடியாகக் கருதப்படுகின்றது. மத்திய வங்கி கொள்ளைமூலம் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கம்பனிகளின் வங்கி இருப்புகள் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. எனவே, சீனி கொள்ளை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் அரச விசுவாசிகள் இருக்கக்கூடும்' என்றார்.

'இதேவேளை, இந்நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு, சுற்றாடல் அழிவு தொடர்பில் கடந்த காலங்களில் பிக்குகள் உரத்துக்குரல் எழுப்பினர். அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், சிங்கராஜ பகுதியில் நடைபெறும் வன அழிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட யுவதியை மிரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதுடன், வனத்துறை அதிகாரிகளும் அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இது குறித்த யுவதியை அச்சுறுத்தும் செயற்பாடாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம்' என்றார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்றும் இந்நிலையில் சம்பள உயர்வை தடுக்கும் வகையில் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன என்றும் எனவே, சம்பளம் கைகளுக்குக் கிடைத்தப் பின்னரே அதனை வெற்றியாகக் கருதமுடியும் என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X