2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

போதைப்பொருளுக்காக மனைவியை விற்க முயற்சி

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் திரட்டும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு அலவதுகொட பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய அந்தப் பெண், மன உளைச்சல் காரணமாகக் கண்டி ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதன்போது அங்கிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அக்குரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், அங்கு வைத்தியர்களிடம் வாக்குமூலம் அளித்தபோதே இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின்படி:

போதைப்பொருளுக்கு அடிமையான அவரது கணவர், சில வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரகத்தை 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தையும் போதைப்பொருளுக்கே செலவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வாங்கப் பணம் இல்லாத நிலையில், அண்டை வீட்டாருடன் உடலுறவில் ஈடுபடுமாறு கணவர் தன்னை வற்புறுத்தியுள்ளார்.

அண்டை வீட்டு நபர் தனது கை, கால்களைக் கட்டி வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மூன்று பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அக்குரண பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .