2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

இருதரப்பு உறவுகளில் புதிய மைல்கல்

Editorial   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டு இன்று (20) கொழும்பிலிருந்து இந்தியாப் புறப்பட்டார்.

இந்த விஜயமானது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான துடிப்பான மக்கள் தொடர்புகள், பகிரப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் கலாசார நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் தங்கியிருந்த போது, துணை ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதன்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான 'வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை' (OCI) அட்டைக்கான தகுதியை ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறை வரை நீட்டிப்பதாக அறிவித்தார். இது மலையக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த அவர், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து கேட்டறிந்தார்.

நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதா அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இந்தியப் பிரதமரின் வாக்குறுதிப்படி ஆலயப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

துணை ஜனாதிபதியின் இந்த விஜயம், வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக மற்றும் சமூகப் பிணைப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது. குறிப்பாக, இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட 'பாரதத்தின் மைந்தர்கள்' எனும் உணர்வுப்பூர்வமான பிணைப்பை இந்த விஜயம் மேலும் ஆழப்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .