எம்.செல்வராசா
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில், பிசிஆர் இயந்திரமொன்று இன்மையால், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் குவிந்துக் கிடக்கின்றன என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்ட வைத்தியசாலை மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் மரணமடைபவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொளவதற்காக, குறித்த வைத்தியசாலைக்கே சடலங்கள் அனுப்பப்படுகின்றன.
சடலங்களின் 'மாதிரிகள்' எடுக்கப்பட்டு, கராப்பிட்டிய, பதுளை ஆகிய போதனா வைத்தியசாலைகளுக்கே அனுப்பப்படுகின்றன. மேற்படி வைத்தியசாலைகளிலிருந்து பிசிஆர் முடிவுகள் கிடைப்பதற்கு 4,5 தினங்கள் தாமதமாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக, சடலங்கள் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறைகளிலேயே வைக்கப்படுகின்றன. சடலங்களின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கு தாமதங்கள் ஏற்படுவதால், சடலங்களுக்குப் பொறுப்பாக இருந்துவரும் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் சடலங்கள் பிசிஆர் பரிசோதனைகளில், கொவிட் தொற்று உறுதிபடுத்தப்படும்பட்சத்தில், சடலத்துக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
இது தொடர்பில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆர்.எம்.டி ரட்ணாயக்கவை தொடர்புகொண்டு கேட்டபோது, பிசிஆர் இயந்திரம் இன்மையால், பெரும் பிரச்சினைகளும் தாமதங்களும் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
பிசிஆர் இயந்திரமொன்றை, தமது வைத்தியசாலைக்குப் பெற்றுத்தரும்படி சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இயந்திரம் கிடைக்கும்வரை, தாமதங்கள் தொடரும் என்றும் எனவே, சுகாதார இவ்விடயத்தில் உரியகவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.