2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போதைப் பொருளிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்கும் கலந்துரையாடல்

R.Maheshwary   / 2022 நவம்பர் 21 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களிடமிருந்து பாடசாலை மாணவர்களை மீட்கும் வேலைத்திட்டம்  று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் தலைமையில் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் இந்து ஆலய மண்டபத்தில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (20) மாலை நடைபெற்றது.

 இக்கலந்துரையாடலில், அவ்வாறான மாணவர்கள் இனங்காணப்பட்டு, அந்த மாணவர்களை வகுப்புக்களுக்கு தடைவிதித்து, அதற்கமைவாக, போதைப்பொருள் பாவனையிலிருந்து ஏனைய மாணவர்களை காப்பாற்ற, பெற்றோரின் ஆதரவுடன் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமென, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

 நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதான பாடசாலைகள் மற்றும் தோட்டப்புற பாடசாலைகளில் 6 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான வகுப்புகளில் உள்ள மாணவர்களின் வருகைப்பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்த மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இதன்போது அதிபர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, கொட்டகலை நகரில் உள்ள குறிப்பிட்ட சில மருந்துக் கடைகளில் (பாமசி) பாடசாலை மாணவர்களுக்கு போதை மருந்துகளை விற்பனை செய்வதாகவும், போதைப்பொருளை வாங்கிய பாடசாலைக்கு வந்து மிக இரகசியமாக போதைப் பொருட்களை அருந்துவதாகவும் அதிபர்கள் இதன்போது மேலும் தெரிவித்தனர்.

 இக்கலந்துரையாடலில் அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், இந்த போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவிக்கவும், சமூகத்தை பாதுகாப்பதற்காகவும், அது தொடர்பாக ஆராய்வதற்கான குழுக்களை நியமிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஷ்பா விஷ்வநாதன் தெரிவித்ததோடு, போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை பற்றி பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பொது மக்கள் உதவி செய்ய வேண்டும் என  நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உரையில் கோரிக்கையும் முன்வைத்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .