2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மாணிக்கக் கங்கையில் நீராடியவரின் வலது காலை துண்டாடியது முதலை

Kogilavani   / 2016 ஜூலை 06 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம், மாணிக்கக் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த 47 வயதுடைய நபரின் காலை, முதலையொன்று கடித்து துண்டாடிய சம்பவமொன்று கடந்த திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

ஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த மேற்படி நபர், திங்கட்கிழமை இரவு 07 மணியளவில் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போதே முதலையொன்று, அவரது வலது காலை கவ்வி இழுத்துச்சென்றுள்ளது. அருகிலிருந்த ஏனையோர், முதலையின் பிடியிலிருந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

எனினும், வலது காலில் முழங்காலுக்கு கீழான பகுதியை, முதலை கவ்விச்சென்றுவிட்டது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக திஸ்ஸமஹாரம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கதிர்காமத்துக்கு யாத்திரை வந்திருந்த ஹங்குராங்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் 40பேர், மாணிக்க கங்கையின் பாதுகாப்பான இடம் என கூறப்பட்ட இடத்தில் 4ஆம் திகதி இரவு 7மணியளவில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். இதன்போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மாணிக்க கங்கையில், கதிர்காமம் புண்ணியபூமிக்கு அருகில்  இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட முதலைகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டுச் சென்று விடப்பட்டுள்ளன. எனினும், 100க்கும் அதிகமான முதலைகள், மாணிக்க கங்கையில் காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .