2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மலையக மக்களுக்கான வீடுகளை 'கட்டம்கட்டமாகவே நிர்மாணிக்க முடியும்'

Kogilavani   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆர்.ரமேஷ்

'மலையக மக்களுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகள் தற்போதைக்கு தேவைப்படுகின்றன. இவ்வீடுகளை ஒரே வருடத்தில் கட்டி முடிக்க முடியாது. கட்டம்கட்டமாகவே நிர்மாணிக்க முடியும்' என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'மலையக மக்களை தொழிற்சங்க ரீதியில் அடிமைப்படுத்தி வைத்திருந்த காலம் ஒழிந்துவிட்டது. இன்று மலையகத்தில் அமைத்துக் கொடுக்கப்படுகின்ற இந்திய அரசாங்கத்தின் தனி வீட்டுத் திட்டத்தை அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திகாம்பரம்தான் அமைத்துக்கொடுக்கின்றோம் என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. இந்திய அரசாங்கமே அத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெருந்தோட்டங்களில் அமைக்கப்படும் 4,000 வீட்டுத் திட்டத்தில் முதல் கட்டமாக 404 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(24)   பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர், 'கடந்த அரசாங்கத்தில் ஒதுக்கப்பட்ட சிறியதொகை நிதியைக் கொண்டு, நான்; மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்களுக்கு அபிவிருத்தி சேவைகளை முன்னெடுத்து வந்த வேளையில் சில தலைவர்கள்  எம்மை வழிமறித்து தாக்கியதுடன் எமது முன்னெடுப்புகளை தடுப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இன்று அந்தக் காலம் மாறியுள்ளது' என்றார்.

'அன்று தோட்டப் பகுதியிலிருந்து ஆலயத்துக்காகவும் வேறு தேவைகளுக்காகவும்  நிதி கேட்டு வந்தவர்கள் இன்று எம்மிடம், பாடசாலை வேண்டும், வீடுகள் வேண்டும் எனக் கேட்டு வருகின்றனர்.  75 வருடங்களுக்கு பின்னர், மலையக மக்கள் எங்களைச் சிந்திக்க வைத்துள்ளனர்.

இதனடிப்படையில் ஒற்றுமையாக செயற்பட்டுவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களான நான் உட்பட இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், ஆகியோரை எவராலும் பிரிக்க முடியாது.

எமது மக்கள் லயன் காம்பிராக்களில் ஒடுங்கி வாழ்ந்த காலத்தை மாற்றியமைப்பதற்காக   ஜனாதிபதி மற்றும் பிரதமர் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அம்மக்கள் நிலையாக வாழும் சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .