2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

விரைவில் கூகுள் பலூன் செயற்திட்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயற்திட்டம், இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார். 

அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக அமைச்சரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

தொடர்ந்து அவர் கூறுகையில், 

மேற்படி இணைய சேவைகள் குறித்து கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத்திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பல பாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்க விடப்பட்டு, சோதனைகள் நடத்தப்படவுள்ளன. 

இதன் முதலாவது சோதனை, இம்மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும். இக்கூட்டுச் செயற்திட்டத்;தில் 25 சதவீத பங்குகளை நாம் கொண்டிருக்கின்றோம். 

இந்த அதி நவீன திட்டத்தை செயற்படுத்துவதன் மூலம், உலக நாடுகளின் கவனம் எமது நாட்டின் மீது திரும்பியுள்ளது. 

அத்துடன், தகவல் தொடர்பாடல் துறையிலுள்ள உலகின் மிகச் சிறந்த வல்லுனர்கள் பங்கேற்கும் டிஜிட்டல் மகாநாடு ஜுன் மாதத்தில், எமது நாட்டில் நடைபெறவுள்ளது.

தகவல் தொடர்பாடல் தொடர்பான பெரும்பாலான வேலைத்திட்டங்கள், இவ்வருடத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம், அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வது மிகவும் இலகுவானதாக அமையும். 

கூகுள் பலூன்கள் விமானங்கள் பறக்கும் உயரத்தை விட இரு மடங்கு உயரத்தில் பறக்கவிடப்படும். இந்த பலூன்களின் ஆயுட்காலம் ஆறு மாதங்களாகும். ஆனால், அவற்றை மீள் சுழற்சிக்கும் உட்படுத்தலாம். 

இந்த பலூன் செயற்திட்டமானது, எமது நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்களாக அமையாது. 

உலகின் பிரதான கோடீஸ்வரர்களில் ஒருவரான கூகுள் நிறுவனத்தின் இணைய ஸ்தாபகர் சேர்ஜி பிரின் போன்றவர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமை, எமது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .