2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வல்லுறவுக்குப் பின்னர் சிறுமியை வாழையிலையில் மூடியோருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2017 மே 16 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ .ரமேஸ்  

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேயிலைமலை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை, முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

சம்பவத்தையடுத்து, கந்தப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரும், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் த .டி.சில்வா முன்னிலையில் நேற்று (15) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, அந்த மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட, தேயிலைமலை தோட்டத்தைச் சேர்ந்த சந்தேக நபரான கிளி என்றழைக்கப்படும் செல்வராஜ் கமலதாஸ் என்பவரின் குடும்பத்தை தோட்டத்தில் அனுமதிக்க கூடாது என ​அத்தோட்ட தொழிலாளர்கள், நேற்று (15) ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

கந்தப்பளை நகரில் கடந்த 12ஆம் திகதியன்று, ரதபவனியைப் பார்வையிடுவதற்காக, வீட்டிலிருந்து இரவுவேளையில், சென்ற இந்தச் சிறுமியை, முச்சக்கர வண்டி ஒன்றில் சந்தேக நபர்களான நால்வர் ஏற்றிச் சென்றுள்ளனர்.  

இவர்கள், கந்தப்பளை நகருக்குச் செல்லாமல், கொங்கோடியா தோட்டத்தின் சிறிய காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள இடத்துக்கு முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியுள்ளனர்.  

சிறுமி மயக்கமடைந்ததை அறிந்த அவர்கள், சிறுமி இறந்துவிட்டதாக எண்ணி, அவருடைய உடலை, வாழை இலைகளினால் மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

இந்நிலையில், குறிப்பிட்ட காட்டுப்பகுதிக்கு ​13ஆம் திகதியன்று புல் வெட்டுவதற்காகச் சென்ற கொங்கோடியா தோட்ட மக்கள், வாழையிலைகளினால் மூடப்பட்டிருந்த சிறுமியை மீட்டுள்ளனர்.  

அப்போது, அந்த சிறுமி ஓரளவுக்கு மயக்கம்​ தெளிந்த நிலையில் இருந்துள்ளார். அத்துடன், தனக்கு நேர்ந்ததை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், தங்களுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்​பை ஏற்படுத்திய இனந்தெரியாத நபர், திருட்டு சங்கர் வீட்டுக்கருகில், உனது மகள் வாழை இலையினால் மூடப்பட்டு கிடக்கின்றாள். முடிந்தால் காப்பாற்று என தெரிவித்தாக, அந்த சிறுமியின் பெற்றோர், பொலிஸில் செய்திருந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தகவலை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், ​ கொங்கோடியா மக்களின் உதவியுடன் அச்சிறுமியை மீட்டு, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.  

சிறுமி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .