2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபருக்கு அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளர் அச்சுறுத்தல்: பிரபா

Menaka Mookandi   / 2012 ஜனவரி 06 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ள ஆர்.உதயகுமாருக்கு, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரினால் தொலைபேசியினூடாக கடத்தல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினறுமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது விடயமாக மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தானும் மேல்மாகாணசபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரனும், அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளரிடம் வினவியபோது அவர் மரியாதையின்றி  உரையாடினார் என்றும் பிரபா கணேசன் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரபா கணேசன் எம்.பி.யினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த கல்லூரியின் முன்னாள் அதிபர், கடந்த செப்டெம்பர் மாதம் கடமையிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரது இடத்திற்கு அதிபர் தரம் அற்ற சாதாரண ஆசிரியையாக கடமை புரிந்த அவரது மனைவிக்கு பொறுப்புகளை கையளித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலையின் வளர்ச்சி கருதி கடந்த மாதம் மேல்மாகாண கல்வி அமைச்சின் மூலமாக அதிபருக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் பதவிக்கு விண்ணப்பம் செய்த ஆர்.உதயகுமார் என்பவர், எனது சிபாரிசின் பெயரில் அதிபருக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும் மேற்படி உதயகுமார் என்பவர் பொறுப்புகளை கையேற்க சென்ற பொழுது அங்கு அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த ஆசிரியை பொறுப்புக்களை கையளிக்க மறுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் கடந்த சில தினங்களாக பாடசாலைக்கு வருகை தராத நிலையில் அதிபர் அலுவலகத்தை மூடி வைத்துள்ளார். இதையறிந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கல்லூரி வளாகத்தின் முன்பாக பழைய அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக எனக்கு அறியத்தந்தார்கள்.

உடனடியாக ஸ்தலத்திற்கு சென்று இது சம்பந்தமாக மேல்மாகாண ஆளுநரிடம் முறையிட்டதை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை புதிய அதிபருக்கு பொறுப்புக்களை பெற்றுத்தருவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு விளக்கமளித்ததன் மூலமாக தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய அதிபராக நியமனம் பெற்ற ஆர்.உதயகுமாருக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரிடமிருந்து தொலைபேசியினூடாக கடத்தல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நானும் மேல்மாகாணசபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரனும் இது சம்பந்தமாக அகில இலங்கை இந்து மாமன்ற செயலாளரிடம் வினவியபோது, மக்கள் பிரதிநிதிகள் என்ற மரியாதையின்றி எங்களிடம் உரையாடினார்.

இது சம்பந்தமாக நியமனம் பெற்ற அதிபர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் செய்துள்ளார். இந்து மதத்தை முழுமையான முறையிலே நாங்கள் நேசிக்கின்றோம்.

இந்து மத தலைவர்கள் மூலமாக பல தமிழ் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆனால் அரசாங்க பாடசாலைகளில் இப்படியானவர்களது சுயநல அத்துமீறல்களுக்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.

அதிபர் தரமற்றவர்களுக்கு அதிபர் பதவி கொடுப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தனக்கு வேண்டியவர்களை அரசாங்க பாடசாலைகளில் அதிபராக நியமிக்க எவருக்கும் உரிமை இல்லை' என்று பிரபா கணேசன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Jai Friday, 06 January 2012 08:44 PM

    இருந்துட்டு இப்புடி ஒரு அறிக்கை உடுங்க, அப்பதான் இருக்கிறது தெரியும். அய்யா சவ்கியமா? - போன தேர்தலுக்கு பாத்தது - பெரிய வீட்டு சாப்பாடு எல்லாம் எப்புடி.. அப்புறம் இருக்ற ஒன்னு ரெண்டு தமிழ் இஸ்கூலும் இனி உருப்பட்ட மாதிரிதான்.. அதிபர் தரம் இல்லாதவங்களுக்கு குடுக்க கூடாது நியாயம் தான். அப்டினா சட்ட சபைக்கு போறப்போ நாங்க இத பாத்து இருக்கணுமே - சரி மக்கள் பிரதிநிதி தான். எந்த மக்களுக்கு ? யுஎன்பி கு தானே மக்கள் ஒட்டு போட்டாங்க - அப்போ மட்டும் அந்த மக்கள் எங்க போனாங்க ?

    Reply : 0       0

    Sekar Friday, 06 January 2012 11:12 PM

    அரசியல் ஒரு புறமிருக்க, குடும்ப ராஜ்யம் நடத்தினது பலருக்கு தெரிந்தும், எவரும் கண்டுகொள்ளவில்லை, திடீரென இப்பிடி ஒரு நடவடிக்கை எடுப்பது வரவேற்கதக்கது, சம்பத்தப்பட்ட ஆசிரியையை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    Pathikapatta aasiriyai Friday, 06 January 2012 11:15 PM

    இனியாவது அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும். - இவர்களின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட asiriyar

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .