2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரபா எம்.பிக்கு மட்டுமே தகுதியுண்டு : சுரேஷ்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மேல் மாகாணசபை தேர்தல் தொடர்பில் பல கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் தேர்தலில் போட்டியிடும் ஒரே தகுதி நாடாளுமன்ற உறுப்பினர்; பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸிற்கே உண்டு. ஏனெனில் கடந்த மூன்று வருட காலமாக மேல்மாகாணசபை உறுப்பினர்களின் கடமையையும் சேர்த்தே நாம் செய்து வருகின்றோம் என்பது மக்களுக்கு தெரியும்' என ஜனநாயக மக்கள் காங்கிரின்; பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன்   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இன்று தலைநகரத்தில் தலைமை கட்சி என்றும் இங்கு தம்மை அசைக்க முடியாது என்று  சொல்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடமும் இ.தொ.காவிடமும் தம்மை பலவீனப்படுத்தாமல் விட்டுக் கொடுங்கள் என்று கெஞ்சி நிற்பது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஐந்து வருட காலமாக தமது கட்சியில் இருந்த மாகாணசபை உறுப்பினர்களின் கையாலாகாத்தனத்தையே இது எடுத்துக் காட்டுகின்றது.

ஏற்கனவே இருக்கும் மாகாணசபை உறுப்பினர்களை மக்கள் சேவை செய்யவைக்க வேண்டிய கடமையிலிருந்து இக்கட்சியின் தலைமைத்துவம் தவறியுள்ளது. இவ்வடிப்படையிலே மீண்டும் மாகாணசபைக்கு போட்டியிட்டு உறுப்பினர்களை பெற்றுகொள்ள முயற்சிப்பதன் மூலமாக வெற்று அரசியல் செய்வதைதான் இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

வடக்கிற்கு சென்று பிரசாரம் செய்தது வட மாகாண மக்களின் நன்மைக்கு அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொழும்பில் வந்து போட்டியிடக் கூடாது என்பதுதான் வெட்ட வெளிச்சமாகின்றது. இக்கட்சியின் தலைவரின் ஊடக அறிக்கைகளை மக்கள் ரசித்து படிக்கின்றார்கள். பலர் புள்ளரித்தும் போகின்றார்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நடைமுறையில் கொழும்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதையும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட யுத்ததத்தை காட்டி அரசாங்கம் இன்றுவரை சிங்கள மக்களின் வாக்குகளை பறித்துக் கொண்டிருக்கின்றது என்று குற்றம் சாட்டும் இவர்கள் எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்த 2006-2007ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தலின் போது இடம்பெற்ற எதிர்ப்பபு ஆர்ப்பாட்டங்களை இன்னும் ஞாபகப்படுத்தி வாக்குகளை கோரி நிற்பது மட்டும் எந்த வகையில் நியாயமானது.

இருப்பினும் அக்காலப்பகுதியிலே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எவ்விதமான பாதுகாவலர்கள் இல்லாமல் எம்மைப்போன்ற தோழர்களுடன் இணைந்து துணிகரமாக மேடை அமைத்துக் கொடுத்தவர் பிரபா கணேசன் எம்.பியே என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .