2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் நடாத்திய “விவாதப்பட்டறை”

A.P.Mathan   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


இளம் சந்ததியினரிடம் விவாதத் திறமைகளை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள 'இலங்கை தமிழ் விவாதிகள் கழகம்' தனது முதலாவது விவாதப்பட்டறையை கடந்த ஞாயிறு (10-11-2013) வெகுசிறப்பாக நடாத்தியது. மேல்மாகாண பாடசாலைகளின் தமிழ் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இந்த விவாதப்பட்டறையில் 36 பாடசாலைகளில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். மாணவர்கள் மத்தியில் அருகிவரும் தமிழ் விவாதக்கலையின் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிப்பதை தனது பிரதான இலக்குகளில் ஒன்றாக கொண்டு செயற்பட்டுவரும் இலங்கை தமிழ் விவாதிகள் கழகமானது, மாணவர்களை பயிற்றுவிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்து உள்ளது. அதன் முதற்படியாகவே, இந்த விவாதப்பட்டறையானது கொழும்பு இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்புற நடாத்தப்பட்டது.
 
தமிழ்ச் சமூகத்தின் இளந்தலைமுறையின் ஆளுமை விருத்தியானது சமூகத்தின் இருப்புக்கும் நிலைப்புக்கு தேவைப்பாடான அதேவேளை தவிர்க்கவியலாத கூறாகும். இதனைக் கருத்தில் கொண்டு இலங்கை தமிழ் விவாதிகள் கழகமானது இலங்கை முழுவதும் நடாத்தப்படவுள்ள விவாதப்பட்டறையின் முதன் நிகழ்வை மேல்மாகாணப் பாடசாலைகளிடையே ஒழுங்குபடுத்தியது.   
 
கழகத்தின் உபதலைவரான சுந்தரலிங்கம் முகுந்தன் அவர்களது வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ஓய்வுபெற ஆசிரியையும் பல விவாதிகளை உருவாக்கிய வழிகாட்டிய பெருமைக்குரிய செல்வி ஸ்ரீகுமாரி கதிரித்தம்பி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வின் அனுசரணையாளரான IDM Media University நிறுவனத்தின் முகாமையாளரான விமலச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார்.
 
பயிற்சிகள், அறிவை மேம்படுத்தும் விளையாட்டுகள் ஆகியவை அடங்கிய இந்த நிகழ்வில், விவாதம் பற்றிய அறிமுகம் மற்றும் அவற்றின் அடிப்படைகளை செல்வி பவித்ரா வரவேஸ்வரன் அவர்களும் - வாசிப்புத்திறன், இலக்கியம் பற்றி விமலநாதன் விமலாதித்தன் அவர்களும் - உச்சரிப்பு, மொழியாளுமை பற்றி பாலேந்திரன் காண்டீபன் அவர்களும் மாணவர்களைப் பயிற்றுவித்தனர். தொடர்ந்து திறனாய்ந்து சிந்தித்தல் மற்றும் ஒன்றுபட்ட உழைப்புப் பற்றி தெய்வேந்திரன் ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்களும், தர்க்கம் மற்றும் பேச்சுக்கலை நுணுக்கங்கள் பற்றி நல்லையா குமரகுருபரன் அஷோக்பரன் அவர்களும் பயிற்றுவித்தனர். இறுதியாக, செல்வி அபிலேஷா சேகபு அவர்கள் மாணவர்களுக்கு தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன் சார் பயிற்சியை வழங்கினார்.
 
ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் நடாத்தப்பட்ட, ஆக்கத்திறனை மேம்படுத்தும் பல விளையாட்டுகளில் பங்கு கொண்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு நிகழ்வின் இறுதிவரை தமது பங்களிப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது. பல்வேறுபட்ட பாடசாலைகளில் இருந்து வந்து பங்குபெற்ற மாணவர்களைக் கலந்து புதிய குழுக்களாக பிரிக்கப்பட்டமை ஒரு சிறப்பான அம்சமாகும். இந்த மாணவர்குழுக்களுக்கு தனித்தனியாக விவாத ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. விவாதம் பற்றிய அவர்களது சந்தேகங்கள் தனிப்பட்ட முறையில் அணுகி தீர்த்து வைக்கப்பட்டமை மாணவர்களது பலத்த வரவேற்புக்கு உள்ளனது. மாணவர்களை அழைத்துவந்த பொறுப்பாசிரியர்கள் பலரும் இதுபோன்ற பயிற்சிப்பட்டறைகளை மேல்மாகாணத்தின் பல உப பிராந்தியங்களிலும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு, தத்தம் பிராந்தியங்களில் உள்ள பாடசாலை விவாத அணிகளை ஒருங்கிணைத்து பயிற்சிக்களத்தை அமைத்துத் தருவதில் விருப்பம் தெரிவித்தனர்.
 
இலங்கை தமிழ் விவாதிகள் கழகத்தின் பொருளாளர் தயாபரன் விக்னேஸ்வர ரெஷாங்கன் அவர்கள் தனது நன்றியுரையில், நிகழ்வின் மிகுந்த ஆர்வத்தோடு பங்கு பற்றிய மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், பாடசாலையின் அதிபர்கள், நிகழ்வின் அனுசரணையாளர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வு மிகச்சிறந்த முறையில் வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டினார். மேல்மாகாண மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த விவாதப்பட்டறை நிகழ்வைப்போலவே, இலங்கையின் அனைத்துப் பாகங்களுக்கும் சென்று, பல விவாதப்பட்டறை நிகழ்வுகளை நிகழ்த்துவதற்கு, இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் வளர்ந்துவரும் எதிர்கால சந்ததியின் அறிவுத்திறனும் சிந்தனை வளர்ச்சியும் மேம்படும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
 
இன்றைய தமிழ்ச் சூழலானது காத்திரமான விவாதங்களையும் கருத்துப் பரிமாறல்களையும் வேண்டிநிற்கின்றது. கருத்தைச் சொல்வதற்கும் அதைக் கேட்பதற்குமான ஜனநாயகப் பண்பை தமிழ்ச்சமூகம் தமது இளைய சமுதாயத்திடம் உருவாக்கவேண்டிய வரலாற்று கடமை எம்முன் உள்ளது. எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கவும் கலந்துபேசவும் முரண்படவும் இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான வெளியை உருவாக்குவதும் காலத்தின் தேவையாகிறது. இக்காலத்தின் தேவையை உணர்ந்து இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் தொடர்ந்தும் ஆக்கத்திறன் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
 
-நிமல்






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .