2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.க. மன்னிப்பு கோரியது தவறாகும் :மனோ

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'உண்மையில் அமைதியாக நடைபெற்ற மாநாட்டை குழப்ப வந்தவர்களே, மாநாட்டை நடத்தியவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குழப்பம் விளைவிக்க வந்த நபர்களிடம், இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மன்னிப்பு கோரியுள்ளது தவறானதாகும்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

'இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி பிரிவினையை வளர்க்கும் பொதுபலசேனவின் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரர்தான் நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, நண்பர்கள் விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோர் தலைமையிலான கட்சிகள், ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இடம்பெறும் சமகி என்ற ஐக்கியத்துக்கான மக்கள் சக்தி  அமைப்பு, பொதுநலவாய மாநாட்டு வேளையில் கொழும்பு சிறிகொத்த நிலையத்தில் ஒரு மனித உரிமை மாநாட்டினை நடத்தியது.

அவ்வேளையில் அந்த  மாநாட்டு மண்டபத்தை நோக்கி வந்த பொதுபல சேன அமைப்பினர் அம்மாநாட்டை குழப்ப முயன்றனர். அதனால் அங்கு வன்முறை இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று, சிறிகொத்த மண்டப பகுதியில், குறித்த பொதுபல சேனையினரிடமும், அதன் பொதுசெயலாளர் கலபொட ஞானசார தேரரிடமும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இந்த நடவடிக்கை மன்னிப்பு கோரிய நபர்களின் தனிப்பட்ட நடவடிக்கையாகும்.  இது எந்த விதத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாம் ஏற்படுத்தியுள்ள சமகி இயக்கம், எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளை கட்டுப்படுத்தாது.

உண்மையில் அமைதியாக நடைபெற்ற மாநாட்டை குழப்ப வந்தவர்களே, மாநாட்டை நடத்திவர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

குழப்பம் விளைவிக்க வந்த நபர்களிடம், இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் மன்னிப்பு கோரியுள்ளது தவறானதாகும். இதையிட்டு நாம் ஆச்சரியப்படுகின்றோம். இவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார்கள் என எமக்கு தெரியாது. இதன் மூலம் இவர்கள் சிங்கள மக்களை சந்தோசப்படுத்த நினைத்தார்களோ தெரியாது. ஆனால், இதன்மூலம் சிங்கள மக்கள் சந்தோசமடைவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ், முஸ்லிம் மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள்.

பொதுபலசேன என்ற தீவிரவாத அமைப்பிடம் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தயா கமகே ஆகியோர் மன்னிப்பு கேட்டமைக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் இன மற்றும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கும் பொதுபலசேன என்ற இன-மதவாத அமைப்பிடம், நாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவுமில்லை.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களின் இன, மத, மொழி சுதந்திரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் பொதுபல சேனை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் வர்த்தக, தொழில் நடவடிக்கைகளும் இடையூறு  செய்கிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இனவாத கருத்துகளை பரப்பி வருகிறது. இவையே உண்மையான பிரிவினைவாத, குழப்பவாத, வன்முறை பயங்கரவாதத்திற்கு அடித்தாளமிடும் செயற்பாடுகள் ஆகும். அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவது முற்போக்கான செயற்பாடுகள் ஆகும்.

நாம் இந்நாட்டில் ஐக்கியவாதிகள். பொதுபல சேனை, இந்நாட்டில் பிரிவினைவாதிகள்.  ஆகவே பொதுபல சேனை என்ற பிரிவினைவாத அமைப்பிடமும், அந்த அமைப்பின் பொது செயலாளர் கலபொட ஞானசார தேரரை இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் பொதுமன்னிப்பு கோரும்படி நாம் கோருகிறோம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .