2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பத்திரிகையாளர் எம்.ஏ.ஸி.முஹம்மட் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வாழ்நாளையே பத்திரிகைத் துறைக்கு அர்ப்பணித்த மூத்த பத்திரிகையாளர் எம்.ஏ.ஸி முஹம்மட்டின் மறைவு ஊடகத்துறைக்கு பாரியதொரு இழப்பாகும் என்று இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அதன் அனுதாபச் செய்தியில் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கே.ஜெயந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது

ஒரு பிராந்திய செய்தியாளராக 1960களின் ஆரம்பத்தில் வீரகேசரியில் இணைந்து கொண்டதன் மூலம் தனது பத்திரிகைத் துறை வாழ்வை ஆரம்பித்த முஹம்மட் அரை நூற்றாண்டுக்கு  அதிகமான காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றி பெரும் பங்களிப்பை ஊடகத் துறைக்கு வழங்கியுள்ளார்.

மாத்தறை நிருபராக வீரகேசரியில் 1990 களின் நடுப்பகுதி வரை பணியாற்றிய முஹம்மட் பின்னர் தினக்குரலில் இணைந்து கொண்டு பாராளுமன்றச் செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார்.

ஓய்வு பெறும் வரை நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்த அவர் பின்னர் சொந்த ஊரான திக்குவல்லையில் இருந்து மீண்டும் பிராந்தியச் செய்தியாளராக சேவையாற்றி வந்தார்.

அவர் மரணம் அடைவதற்கு சில மணித்தியாலங்கள் முன்னதாகக் கூட பத்திரிகை அலுவலகத்திற்கு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி கொண்ட மூத்த பத்திரிகையாளர் முஹம்மட் பல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் கூட ஏனைய பத்திரிகையாளர்களுக்கு முன் உதாரணமாக பணியாற்றிய முஹமட்டின் மறைவினால்  துயர்ருற்றுறிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

அவருக்கு இரங்கல் தெரிவிப்பதில் ஒன்றியம் இலங்கை ஊடகத்துறை சமூகத்துடன் இணைந்து கொள்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .