2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இந்த ஆட்சியிலே தெய்வங்கள் அகதியாகின்றன: மனோ

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஆலயங்களையும், பள்ளி வாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் தகர்த்து தாக்கியது  இந்த ஆட்சியின் அரவணைப்பில் செயற்படும் இனவாத-மதவாத அமைப்புகள் என்பதை கொழும்பில் வாழும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இன்று கொள்ளுப்பிட்டியில் எழுந்தருளியிருந்த பூமாரியம்மன் அகதியாகி அருள்பாலிக்க இடமில்லாமல் இருக்கின்றாள் என்பதை இந்து மக்கள் மறந்துவிடக்கூடாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

'தலைநகர் உட்பட இந்நாடு முழுக்க பல்வேறு இஸ்லாமிய பள்ளிவாசல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதல், அச்சுறுத்தல், அவமானங்கள் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதை முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் மறந்துவிடக்கூடாது' எனவும் அவர் தெரிவித்தார்.

கொம்பனி தெரு டோசன் வீதி தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரiயாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

'கொம்பனி தெருவானது  இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த மக்கள் கலந்து வாழும் பூமியாகும். தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் இணைந்து வாழும் மண்ணாகும். இங்கு மலே மக்களும் வாழ்கிறார்கள். உண்மையில் இது முழு நாட்டுக்குமே முன்மாதிரி வட்டாரமாகும். இந்த முன்மாதிரி வட்டாரத்துக்கு இன்று ஆபத்து வந்து விட்டது. ஏனென்றால் எல்லா மதத்தவரும், எல்லா இனத்தவரும் இணைந்து வாழ்வது இந்த அரசுக்கு பிடிக்காது.

தலைநகரில் வீடுகள் இடிக்கப்படுவது, குடியிருப்புகள் அகற்றப்படுவது கொம்பனி தெருவில்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னமும் பல வீடுகள் இடித்து அகற்றப்படும் ஆபத்தை இந்த வட்டாரம்  எதிர்நோக்கி உள்ளது. எனவே கொழும்பின் வேறு எந்த ஒரு வட்டாரத்தையும் விட, இந்த கொம்பனி தெரு வட்டார மக்கள்தான் இந்த அரசுக்கு காட்டமான பதிலடியை எதிர்வரும் தேர்தலிலே தர வேண்டும். அந்த கடப்பாடு உங்களுக்கு இருக்கிறது.

இன்று இந்த அரசாங்கம் கொழும்பிலே தன் சொந்த சின்னத்திலும் வாக்கு கேட்கிறது. அரசாங்கத்தின் உள்ளே இருக்கும் பங்காளி கட்சிகளை அனுப்பி அவர்களின் சொந்த சின்னங்களிலும் வாக்கு கேட்கிறது. வேப்பிலை என்றும், புகையிலை என்றும், ஆலமரம் என்றும், தென்னை மரம் என்றும், ஆடு, மாடு, கோழி, குருவி, காக்கா என்றும் அரசும், அரசின் முகமூடி அணிந்த முகவர்களும் தங்கள் சின்னங்களை எடுத்துக்கொண்டு கொம்பனி தெருவிலே இன்று தேர்தல் கால திருவிழா நடத்துகிறார்கள்.

குடியிருப்புகளையும், மத ஸ்தலங்களையும்  உடைத்து அகற்றப்படுவதை ஏற்றுகொள்ள மறுக்கிறீர்கள் என்ற செய்தியை இந்த அரசுக்கு தெளிவாக தெரிவிக்க இந்த தேர்தலை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் அரசாங்கத்தின் சின்னத்துக்கும், அவர்களின் பங்காளி சின்னங்களுக்கும் வாக்களிப்பீர்களாயின், நீங்களே உங்கள் வீட்டை, பள்ளியை, கோவிலை, தேவாலயத்தை உடைக்க கடப்பாரையை எடுத்து அரசின் கையில் கொடுத்த பழிபாவத்துக்கு ஆளாவீர்கள்.

நான் சொன்னதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். என்னையும் விலைக்கு வாங்க முயற்சித்தார்கள். இன்று அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டு விட்டார்கள். நான் விலை போக மாட்டேன் என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டது. ஆகவே இன்று ஒரு குறுக்கு வழியை பயன்படுத்தி என்னை அழிக்க பார்க்கிறார்கள். நமது வாக்குகளை சிதறடிப்பதுதான் அந்த குறுக்கு வழி. மக்களின் துன்பங்களை தீர்ப்பது அல்ல, இவர்கள் நோக்கம். அந்த துன்பங்களை உலகறிய சொல்லும் வாயை மூடுவதுதான் இவர்கள் நோக்கம். மக்களின் கண்ணீரை துடைப்பது அல்ல, இவர்கள் நோக்கம். அந்த கண்ணீரை துடைக்கும் கரத்தை வெட்டுவதுதான் இவர்கள் நோக்கம். இதை உணர்வுள்ள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றும் தெரிவித்தார்.    

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .