2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரிக்க வேண்டும்: விந்தன்

Kogilavani   / 2014 மார்ச் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

'மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பொதுமக்களை கோரியுள்ளார்.

இது தொடர்பாக விந்தனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 'மேல்மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஏணிச் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கின்றது. ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக  நாட்டில் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் சமுகத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர்கள்.           
  
வடக்கு, கிழக்கிலும் தலைநகரிலும் பேரினவாத அரசுகளாலும் அரச ஆதரவுக் குழுக்களாலும் இனவாதக் குழுக்களாலும் படையினராலும் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களான  கொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள், நில ஆக்கிரமிப்புகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், மித மிஞ்சிய இராணுவ பிரசன்னம், வடகிழக்கில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரைகளை அமைத்தல், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களையும் பள்ளிவாசல்களையும் உடைக்கும் அராஜக செயல்களுக்கு எதிராகவும்  அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான, மனிதநேய மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராகவும், நீதி கோரியும், அரசியல் உரிமை கோரியும் தலைநகரிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும்  பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் ஜ.ம.முன்னணியினர் தீவிரமாக முன்னெடுத்தும் வருகின்றனர்.

இறுதி யுத்தத்தில் காணாமற்போனோர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளின்  விடுதலைக்காகவும் தொடர்ந்து   குரல்கொடுப்பவர்கள். நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக பல மேடைகள் ஏறியும் அறிக்கைகள் விட்டும் ஆதரவு தெரிவித்தவர்கள்.

நாட்டில் அதிகாரத்தை பகிர்ந்தளித்து நாட்டை ஐக்கியப்படுத்தி கட்டியெழுப்ப அயராது பாடுபட்டவர்கள். எமது மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேசம் வரை சென்று இன்று ஐ.நாவில் எதிரொலிக்கின்றது என்றால் அதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியினருக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை ஒரு போதும் தமிழினம் மறக்கப் போவதுமில்லை, மறுக்கப் போவதுமில்லை. 

இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பினராகிய எம்மாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராலும் முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தமிழ்பேசும் இனத்திற்காக நேரடியாகவும் மற்றும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையங்கள் ஊடாகவும் குரல்கொடுத்து நாடுகளின் தூதுவராலயங்கள் நாடுகளின் இராஜதந்திரிகள் மட்டத்திற்கும் இந்த நாட்டில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் அனைத்து விடயங்களினையும் அரசியல் நோக்கம் கருதாது உணர்வு பூர்வமாக எடுத்தியம்பி வருபவர்கள்.       
                                                                             
இப்படியான ஒரு கட்சிக்கு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆதரவு கொடுப்பது தமிழர்களாகிய எமது தார்மீக பொறுப்பும் கடமையுமாகும். வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தமிழ்பேசும் மக்கள் கட்டாயமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச்சின்னத்திற்கு  வாக்களித்து நீங்கள் விரும்பும் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கும்  வாக்களிக்க வேண்டும். இது தான் தற்பொழுது வடகிழக்கிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்  வாழும் தமிழர்களின் விருப்பமும் கூட' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .