2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புனித மரியாள் வித்தியாலயம் தமிழ் கல்வித்துறைக்கு வரப்பிரசாதமாகும்: பிரபா

A.P.Mathan   / 2014 மார்ச் 27 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு மாவட்ட தமிழ் கல்வித் துறையை வளர்ப்பதற்கு நான் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றேன். இதற்காக கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் என்னுடன் கைகோர்த்து செயல்படுகின்றார்கள். அதனடிப்படையில் பம்பலப்பிட்டி புனித மரியாள் வித்தியாலயத்தின் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக என்னுடன் இணைந்து செயல்படுவதை பார்க்கும் பொழுது இப்பாடசாலை எமது தமிழ் கல்வித் துறைக்கு பெரும் வரப்பிரசாதமாகும் என பம்பலப்பிட்டி புனித மரியாள் மகா வித்தியாலயத்தின் கலை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது சேவையினை சரிவர ஆற்ற வேண்டும். கல்வித்துறைக்கு முதலிடம் வழங்க வேண்டும். கல்வியின் மூலமாகவே வறுமையை ஒழிக்க முடியும். அறிவுசார் சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இதனையே எனது முதல் பணியாக கொண்டு செயல்பட்டு வருகின்றேன். கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தையும் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான முழு முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளேன். எனது இந்த முயற்சிக்கு கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் தமது ஆலோசனைகளையும் பங்களிப்பினையும் சிறப்பாக செய்து வருகின்றார்கள். அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை பலர் பலவிதமாக விமர்சித்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை.

அரசாங்கத்திடமிருந்து தனிப்பட்ட வரப்பிரசாதங்களை நான் ஒரு போதும் பெற்றதில்லை. ஆனால் அரசாங்கத்தின் மூலமாக பாரிய நிதியினை பெற்று தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து வருகின்றேன். கடந்த நான்கு வருடங்களில் பன்னிரெண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியினை பாடசாலை அபிவிருத்திக்கு செலவிட்டுள்ளேன். இந்த பாடசாலையும் இதன் மூலமாக பயன் பெற்றுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

எனது இவ் அபிவிருத்திகளுக்கு அரசாங்கம் தடை போடுமாயின் அரசாங்கத்துடன் நான் இருக்கப் போவதில்லை. எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் தட்டிக் கேட்டுப் பெறுவதற்கு வெறுமனே ஆர்ப்பாட்ட கூட்டங்கள் ஒருபோதும் உதவாது. மாறாக யுத்த காலகட்டத்தில் நாம் இழந்து போயிருந்த கல்வி கற்ற சமூகத்தை மீண்டும் உருவாக்கி அதன் மூலமாக கல்வி கற்ற அறிவுபூர்வமான போராட்டங்கள் மூலமாகவே எமது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். இதற்காக இங்கே வந்திருக்கும் பெற்றோர்களும் ஏனைய எமது பாடசாலைகளின் பெற்றோர்களும் என்னுடன் இணைந்து செயல்பட வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இவ்விழாவில் பாடசாலையின் அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கங்காதரன் சுரேஷ், நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ், லயன் ராஜூ பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .