2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு பிரான்ஸ் ஆதரவு

Menaka Mookandi   / 2014 மார்ச் 10 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை பிரான்ஸ் ஆதரிக்கும் என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜெயன் போல் மொன்சாயு தெரிவித்ததாக வடமாகாண சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, வடமாகாண சபைத் தவிசாளரை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்புத் தொடர்பில் தவிசாளர் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கையில்,

'வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பில் தூதுவருக்கு விளக்கியுள்ளேன். குறிப்பாக வடக்கில் சிவில் நடவடிக்கையில் இரர்ணுவத்தின் தலையீடு காரணமாக வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் தான் நாம் சார்ந்திருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரர்ணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து வருகின்றோம். இராணுவம் எம்மை எதிரியாக பார்க்கும் அதேவேளை, நாம் இராணுவத்தினரை உறவினர்களாக பார்க்கும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்தேன்' என்றார்.

'வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும், வடக்கு மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளையும், உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய எந்தவித கரிசனைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென தெரிவித்திருந்தேன். 

வடமாகாண சபையானது 25 வருடங்களின் பின்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களாக வடமாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதிகள், தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வந்தன. அத்துடன், வடமாகாணத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் விசேட அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்திருந்தேன்' என்றார்.

அத்துடன், இம்முறை ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் தீர்மானத்தை பிரான்ஸ் ஆதரிக்கும் என்று தூதுவர் என்னிடம் தெரிவித்ததோடு, வட மாகாணத்திற்கான விசேட நிதி ஒதுக்கீடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாடுவதாகவும் தூதுவர் தெரிவித்தார் என சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .