2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை சுகாதாரத் தொண்டர்களை சுகாதாரத் திணைக்களங்களின் கீழ் மாற்ற நடவடிக்கை

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள சுகாதாரத் தொண்டர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்வதற்கு குறித்த பிரதேச சபைகளின் தவிசாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர், சங்கானை (வலி. தென் மேற்கு), உடுவில் (வலிதெற்கு), தெல்லிப்பழை (வலி.வடக்கு) ஆகிய பிரதேச சபைகளில் பொதுசுகாதார வைத்தியதிகாரிகள் இருக்கின்றனர்.

தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரியினால் மல்லாகம் சந்தியிலுள்ள உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையினையடுத்து குறித்த சுகாதார வைத்தியதிகாரிக்கு வலி.வடக்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரியினால், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர், தெல்லிப்பழைப் பொலிஸார் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

அத்துடன், பிரதேச சபைகளின் கீழிருக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தான்தோன்றித் தனமாக செயற்படுவதாகவும், அத்துடன் அவர்கள் சுகாதாரத் திணைக்கள வைத்தியதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் சுகாதாரத் திணைக்களத்தில் சுகாதார வைத்தியதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பிரதேச சபைகளின் கீழிருக்கும் சுகாதாரப் பரிசோதகர்களை விடுவித்து அவர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற விடயம் வலுப்பெற்றது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் மேற்கொள்வோம் என யாழ். மாவட்டத்திலுள்ள 12 சுகாதார வைத்தியதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட பிரதேச சபைகளில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்களை மீளவும் சுகாதார வைத்தியதிகாரிகள் பணிமனைகளுடன் இணைப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து, கடிதம் மூலம் அந்த விடயத்தினை பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு தெரியப்படுத்தி வந்தனர்.

எனினும் அதற்கு குறித்த ஐந்து பிரதேச சபைத் தவிசாளர்களும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வலி. தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் - சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,                                              

'தங்களின் NP/04/01/04/PHI/Gen இலக்க 05.03.2014ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம், 07.03.2014ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு எனது சபைக்குரிய பொது சுகாதார பரிசோதகருக்கு கடிதம் மூலம் அறியத்தந்துள்ளீர்கள்.

எனது சபையில் 02.08.2012 அன்றைய தினம் இ.சோதீஸ் அவர்கள் முறையாக வடமாகாண சுகாதார அமைச்சின் NP/04/01/04/PHI/Appt இலக்க 05.07.2012ஆம் திகதிய கடிதம் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டு சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உடுவிலினால் முறைப்படி விண்ணப்பம் சிபார்சு செய்யப்பட்டு 05.07.2012ஆம் திகதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தங்களின் முறையான NPஃ4ஃ1ஃ4ஃPர்ஐஃயுppவ இலக்க 20.07.2012ம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 23.07.2012ம் திகதி முதல் எனது உள்ளூராட்சி மன்றத்தின் கீழ் பணியாற்றும்படி அறிவித்தற்கிணங்க எனது சபையில் கடமையை பொறுப்பேற்று இன்றுவரை தனது கடமையைச் செவ்வனே செய்துவருகின்றார்.

தற்பொழுது அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கேற்ப உள்ளூராட்சி மன்றங்களில் நிலவுகின்ற ஆளணி வெற்றிடங்கள் அதிகரிக்கப்படவில்லை. குறைந்த ஆளணியை கொண்டே பாரிய சேவைகள் செய்து வருகின்றோம். எனினும் உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படுகின்ற சுகாதார சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கு தனியான சுகாதார அலகொன்று உருவாக்கப்படவேண்டியது காலத்தின் தேவையாகும். தற்போது எமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற வீதி அபிவிருத்திகள், கட்டிடநிர்மாணங்கள், உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிகரிப்புகள், தெருவோர/ நடமாடும் வியாபார நிறுவனங்கள் போன்றன அதிகரித்துள்ளமை தாங்கள் அறிந்ததே.

எனவே உணவு சுகாதாரத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும் அமைவிடங்களை ஒழுங்குபடுத்தவும், கட்டிடநிர்மாணங்களை பார்வையிடுதல், சுகாதார விடயங்களை மேற்பார்வை செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களின் மத்தியில் உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுத்தி வருகின்றன.

தற்போது தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இடைத்தங்கல் பிரதேசங்கள், வாடிவீடுகளும் அதிகரித்து வருகின்றது. இவை உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார உறுதிப்பாடு கேள்விக்குறியாக்கியுள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடமாகாணமானது அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமையால் காலத்தின் தேவைக்கேற்ப உள்ளுராட்சி மன்றத்தின் ஆளணி மீளமைத்தல் நடைபெறாமையால் குறைந்த மனித வளத்துடன் பாரிய சுற்றாடல் பிரச்சினைகளையும் அபிவிருத்தி தொடர்பான விடயத்துடன் கவனம் செலுத்த முடியாத நிலமைகளையும் உருவாக்கியுள்ளது.

உள்ளுராட்சி மன்றமானது ஒரு பிரதேசத்தை பொறுத்தவரையில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உதவுகின்றஃசேவைபுரியும் திணைக்களங்களில் முதன்மையானதாகும். இதன்கீழ் நடைமுறைப்படுத்த வேண்டிய சுகாதாரம் சார் தேவைப்பாடுகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி பாகம் ஐஏ தொடர்பில் பொதுச்சுகாதாரம் தொடர்பான தத்துவம், கடமைகள் விளக்கப்பட்டுள்ளது. இதன்படி வடிகாலமைப்பு, மலசலகூட அமைப்பு, மலக்கழிவகற்றல், குப்பையகற்றல், சுகாதாரத்துக்கு ஒவ்வாத கட்டங்கள் தொடர்பான நடவடிக்கை, பொதுப்பயன்பாட்டுச் சேவைகள், நீர்வழங்கல் மற்றும் பிற இணையான சுகாதாரம் தொடர்பான நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். எனவே உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதாரம் தொடர்பான விடயங்களிற்கு என அலகு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் சுகாதார அலகு உள்ள இடங்களில் ஆளணி அதிகரிப்பும் தேவையுள்ளது அத்துடன் பிரதேசசபைபயின் ஆளணி, சபையின் நிதி ஒதுக்கீட்டுக்கேற்ப எதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்கும் சபைக்கு முன்னிலைப்படுத்தவும் அதிலேற்படும் தடைகளை இனங்கண்டு தீர்வை எட்டி திறம்பட சேவையாற்றுவதில் சபையின் சுகாதார பரிசோதகர் ஆளணி பெரிதும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. அத்துடன் சுற்றாடல் சுகாதாரம், தொற்றுநோய்க்கட்டுப்பாடு, மக்களுக்கு ஏற்படும் நேரவிரயம், பணவிரயம் என்பவற்றைத் தவிர்த்து பாரிய சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் பாரிய பங்கு எமது சபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகருக்கு உண்டு.

நகர நிர்மாணத்தில் சபைக்குரிய எதிர்காலதிட்டம் தொடர்பான விளக்கத்துடன் செயலாற்றுவதால் கட்டிடநிர்மாணம், பாதுகாப்பான குடிநீர் வழங்கலை உறுதிப்படுத்தல் சபையின் கடமையாகும். இப்பிரதேசத்தின் தவிசாளரே உணவு அதிகாரி என்ற வகையில் பிரதேசத்திற்குரிய உணவுச் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்தல், கொல்களங்களில் சுகாதார நிலை மேம்பாடு, திண்மக்கழிவகற்றல், இறுதியழிப்பு, மாயானங்களின் சுகாதார நிலை, சுகாதாரத் தொழிலாளரை மேற்பார்வை செய்தல், சபையில் உள்ள மிகக் குறைந்த ஆளணியை வைத்து நிறைவான சேவையை வழங்குவதற்கான திட்டமிடல், சபைக்குக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை உடனடியாக எந்நேரத்திலும் பரிசோதித்து நடவடிக்கை எடுத்தல், சபைக்குரிய வருமானத்தை அதிகரிக்கும்  அல்லது உறுதிப்படுத்தும் பொருட்டும் வருமான வரிப்பரிசோதகருடன் இணைத்து நடவடிக்கையை முன்னெடுத்தல், போன்ற இன்னோரன்ன  செயற்பாடுகளுக்காக பொது சுகாதாரப் பரிசோகரை எமது சபை பயன்படுத்தி வருகின்றது. பொதுச்சுகாதாரப் பரிசோதகரை விடுவிப்பதால் மேற்குறித்த சேவைகள் அனைத்தும் கேள்விக்குறிக்குள்ளாகும். இதனை நிவர்த்தி செய்ய ஆளணியை அதிகரிக்க வேண்டிய அல்லது உறுதிப்படுத்த வேண்டிய இன்றைய காலகட்டத்திலே ஆளணியை நீக்குதல் பொருத்தப்பாடுடையதல்ல. இதற்கமைய சபைக்குரிய பொது சுகாதார பரிசோதகரை எக்காரணம் கொண்டும் பதிலீடுஇன்றி விடுவிக்கமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றேன். தங்களின் கடிதத்தை மீள்பரிசீலனைக்குட்படுத்தி சாதகமான பதிலை வழங்கும் படி கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், யாழ். பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணியாற்றும் அனைத்து சுகாதார வைத்தியதிகாரிகளும் நாளை வெள்ளிக்கிழமை (14) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அவசர மருத்துவ சேவைகள் இயங்கும் எனவும் சுகாதார வைத்தியதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .