2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணை ஏமாற்றியவர் கைது

Menaka Mookandi   / 2015 மார்ச் 31 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி, அப்பெண்ணின் நகை மற்றும் பணத்தை அபகரித்த சந்தேகநபர் ஒருவரை செவ்வாய்க்கிழமை (31) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.ஸ்.மீடின் தெரிவித்தார்.

துன்னாலையைச் சேர்ந்த மேற்படி பெண்ணை காதலித்துள்ள சந்தேகநபர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்பெண்ணை கூட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் வவுனியாவுக்குச் சென்றுள்ளார். வவுனியாவிலுள்ள விடுதியொன்றில் பெண்ணை தங்கவைத்துள்ள சந்தேகநபர், அப்பெண் அணிந்திருந்த 5 பவுண் பெறுமதியான நகைகள் 40 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தார். வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவேளை, சந்தேகநபர் உடுப்பிட்டிப் பகுதியை சேர்ந்தவர் எனத் தெரியவந்ததையடுத்து, வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு வவுனியா பொலிஸார் தகவல் வழங்கினர். தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் உடுப்பிட்டி பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார். பெண்களைக் காதலித்து ஏமாற்றி அவர்களின் பணம் மற்றும் நகைகளை திருடுவதை தொழிலாகக் கொண்டவர் எனவும் கடந்த 2014 ஆம் ஆண்டு பருத்தித்துறையை சேர்ந்த யுவதியொருவரை கடத்துவதாகக் கூறி கப்பம் பெறுவதற்கு முயற்சித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொறுப்பதிகாரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .