2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இன, மத நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைக்கவும்: ஈ.பி.டி.பி

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக, 'இன மற்றும் மத நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு'' ஒன்று அமைக்கப்பட வேண்டும். இவ்வாணைக்குழுவானது, இன, மத முரண்பாடுகளை வளர்ப்போர் தொடர்பில் விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது.  

உத்தேசிக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவுகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் அரசியலமைப்பு பேரவையின் 5 உறுப்பினர்களில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் அடங்குதல் வேண்டும்.

அரசியலமைப்பு பேரவையினால் சிபாரிசு செய்யப்படும் 11 ஆணைக்குழுக்களுக்குமான உறுப்பினர்கள் தெரிவில் இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்குகள் உயர் மற்றம் மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, வடக்கு - கிழக்கு மாகாண நீதிமன்ற பதிவேடுகள் தமிழில் இருப்பதனால், வழக்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு ஜனாதிபதியினால் நீதிபதிகள் நியமிக்கப்படும் போது, அந்நீதிமன்றங்களில் எவ்வேளையிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஒருவர் நீதிபதியாக இருக்கக்கூடிய வகையில் அந்நியமனங்கள் அமைய வேண்டும்.

அதேநேரம், தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவரும்போது, யுத்த சூழலால் பாரிய இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளதையும் இயற்கை நியதிகளுக்கு மாறாக பாரியளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதையும் கருத்திற்கொண்டு, அதனை ஈடு செய்யும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அமைதல் வேண்டும்.

அத்துடன், இலங்கை வாக்குரிமை பெற்றிருந்த நிலையில் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .