2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'மாணவர்கள் நல்ல நடத்தையை வளர்க்கவேண்டும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மெஞ்ஞானம், நல்ல நடத்தை கடவுள் பயம் என்பவற்றை மாணவர்கள்  வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மெஞ்ஞானம் சார்ந்து வளரும் போது, ஆசிரியர் சொற்கேட்டு மதிப்பளித்து வாழ்பவர்களாகவும் சமூகத்துக்கும் பெற்றோருக்கும் மதிப்பை உருவாக்குபவர்களாகவும் இருப்பார்கள் என யாழ். மெதடிஸ் திருச்சபையின் முதல்வர் அருட்தந்தை ஜி.ரவிசங்கர் அடிகளார் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

பாடசாலை வாழ்க்கை பெறுமதியானது திரும்பக்கிடைக்க முடியாதது. வாழ்வியலுக்கான அனுபவங்களை பெற்றுக்கொள்கின்ற முக்கியமான பருவமாக விளங்கும் பாடசாலைக்காலத்தில் மாணவர்கள் மூன்று விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பாடசாலைகளில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளிலும் துறைகளிலும் மாணவர்கள் பங்குகொள்ள வேண்டும். மாணவர்களின் வளர்ச்சி சார்ந்து அநேக துறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைகளிலும் மாணவர்கள் நிறைவாகப் பங்குகொள்வது கட்டாயமானதாகும். மாணவர்கள் படிப்படியாக விரும்பிய துறைகளில் ஈடுபட்டு அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்.

பாடசாலைக் காலத்தில் அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றவர்கள், தலைமைத்துவப் பண்பைப் பெற்றுக்கொள்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக தலைமைத்துவம் சகோதரப்பண்பு என்பன வளர்த்தெடுக்கப்படுகின்றது.

படிக்கும் காலத்தில் பொதுநலம் சார்ந்த செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும். எனது நாடு, எனது சமூகம், எனது பாடசாலை என்ற ரீதியில் பொதுநலம் சார்ந்து செயற்பட வேண்டும். எதிர்கால மாணவர்களாகிய இளம் தலைமுறையினர் பொதுநலப்பார்வை கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பாடசாலைக்காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .